“இது என்னுடைய இந்தியா அல்ல”: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கொடிய கொடுங்கோன்மை முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் எழுதிவந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் பார்ப்பன மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “இது என்னுடைய இந்தியா அல்ல” என்று வேதனையுடன் கூறினார்.

ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனை வைத்து உருவாக்கப்பட்ட ‘திஸ் இஸ் இட்’ (This is it) பிரம்மாண்ட வெற்றிபெற்ற கன்சர்ட் வகைத் திரைப்படம். இதை முன்மாதிரியாகக் கொண்டு உருவாகியிருக்கிறது ‘ஒன் ஹார்ட்’ படம். ஏ.ஆர்,ரஹ்மான் தயாரித்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பை வந்த ரஹ்மானிடம், பெங்களூருவில் நடந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய ரஹ்மான், “”கௌரி லங்கேஷின் கொலை குறித்து வருத்தம் அடைந்தேன். இவை அனைத்தும் இந்தியாவில் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் இது என்னுடைய இந்தியா அல்ல. என் இந்தியா வளர்ச்சியை நோக்கியும், அன்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.