“என்னை படுக்கைக்கு அழைத்தார் தமிழ் திரைப்பட இயக்குனர்!” – லேகா வாஷிங்டன் புகார்

“பட வாய்ப்பு தருவதற்கு என்னை படுக்கைக்கு அழைத்தார் தமிழ் திரைப்பட இயக்குனர்” என்று நடிகை லேகா வாஷிங்டன் புகார் கூறியுள்ளார்.

திரையுலகில் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக நடிகைகள் புகார் கூறுவது தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நடிகைகளின் பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் லேகா வாஷிங்டன்.

’ஜெயம் கொண்டான்’ படத்தில் வினய்க்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லேகா வாஷிங்டன். ‘காதலர் தினம்’, ‘உன்னாலே உன்னாலே’, ‘வா’, ‘கல்யாண சமையல் சாதம்’, ‘அரிமா நம்பி’ ஆகிய தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

லேகா வாஷிங்டன் தமிழ் திரையுலகில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

சினிமாவில் நடிகையாக இருப்பது சாதாரண காரியம் அல்ல. நிறைய தொல்லைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை எப்போதுமே மறக்க முடியாது. தமிழ் திரைப்பட் இயக்குனர் ஒருவர் என்னை அவரது காரில் அழைத்துச் சென்றார். உன்னை என் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். பதிலுக்கு எனக்கு நீ என்ன தருவாய் என்று கேட்டார்.

அந்த இயக்குனர் கேட்டது புரியாதது போல் நான் நடித்தேன். ஆனாலும் அவர் விடவில்லை. திரும்பத் திரும்ப, நீ என்ன தருவாய் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். எனக்கு கோபம் வந்தது. உங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என்று மட்டும் நினைக்காதீர்கள் என்று அவரிடம் சொல்லி விட்டேன்.

படுக்கைக்கு வர மாட்டேன் என்று நான் சொன்னதும் அவர் அதிர்ச்சியானார். மீண்டும் மீண்டும் என்னை வற்புறுத்தினார். நான் முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டேன். இதனால் அந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி விட்டார்.

இவ்வாறு லேகா வாஷிங்டன் கூறியுள்ளார்