அனிதா அஞ்சலி கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியது சரியா?: திருமா பதில்!

இப்போது சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் எவிடன்ஸ் கதிரின் நூல் விமர்சனக் கருத்தரங்கில், இயக்குனர் ரஞ்சித் அனிதா விவகாரத்தில் முன்வைத்த கருத்துக்களை முன் வைத்து விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் மேடையில் சில கேள்விகளை எழுப்பினேன்.

“அண்ணன் திருமா அவர்களே… தமிழ் அடையாளம், தலித் அடையாளம் இரண்டையும் முன்வைத்துப் போராடும் ஒரே தலைவர் நீங்கள்… நீங்கள் சொல்லுங்கள், தமிழ் அடையாளத்தையும் தலித் அடையாளத்தையும் நேர் எதிராக நிறுத்துவது சரியா?  ஜாதிய முரண்கள் இருக்கிறது என்பதற்காக தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்களை புறக்கணிக்கலாமா? அதேபோல திராவிடம்  சமூக நீதிக்கு அளித்த பங்களிப்புகளை புறக்கணிக்கும் போக்குகளை நீங்கள் ஏற்பீர்களா?”

எனது கேள்விகளுக்கு விரிவான, அற்புதமான பதிலை அளித்தார் திருமா:

“எங்களை தலித் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி தமிழ் மையநீரோட்ட அரசியலில் இருந்து எவரும் எங்களை ஒதுக்க முடியாது.  எல்லா ஒடுக்கு முறைக்கும் எதிராக நிற்பதுதான் தலித் அரசியல். மாநில சுயாட்சி, இன – மொழி உரிமைகளுக்காக இந்தியாவிலேயே குரல் கொடுக்கும் ஒரே தலித் இயக்கம் விசிக.

தமிழ் தேசியத்தில் இருக்கும் சாதியக்கூறுகள் குறித்த ரஞ்சித்தின் கோபம் நியாயம் என்றாலும், அனிதா விஷயத்தில் இந்த சந்தர்ப்பத்தில் அதை வெளிப்டுத்தியது தேவையற்ற ஒன்று. அனிதாவுக்காக குரல் கொடுப்பவர்களில்  சாதியவாதிகள் இருந்தாலும் அவர்களை இந்த சந்தர்ப்பத்தில் ஜனநாயக சக்திகளாக பார்க்க வேண்டுமே தவிர எதிராக நிறுத்தக் கூடாது.”

திருமா அவர்களின் பதிலின் சிறு பகுதி இது. விரைவில் யூ ட்யூபில் வரும். அற்புதமான உரை.

மனுஷ்ய புத்திரன்