எஸ்.வி.சேகர் ட்விட்டுக்கு பா.ரஞ்சித் மறுப்பு: “தலித் என்பது சாதி அல்ல!”

நீட் தேர்வுக்கு எதிராகவும், மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் தேசிய வாதம் பேசும் இயக்குனர் அமீரும், தமிழ் தேசியத்துக்கு எதிராக தலித் வாதத்தை முன்வைக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தும் ஒரே மேடையில் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இது பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, சமூக வலைத்தளங்களில் அமீருக்கு ஆதரவாக ஒரு சாராரும், ரஞ்சித்துக்கு ஆதரவாக மற்றொரு சாராரும் வரிந்துகட்டி, பிரிந்து நின்று, மல்லுக்கட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், நீட் தேர்வை ஆதரிப்பவரும், நடிகருமான எஸ்.வி.சேகர், ரஞ்சித்தை ஆதரித்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தன்னை தமிழன் என்று சொல்லாமல், தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியை பெருமையாகச் சொல்லும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்களுக்கும், வணக்கங்களும்” என்று கூறியிருந்தார்.

எஸ்.வி.சேகரின் இந்த கருத்தை மறுக்கும் விதமாக ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலித் என்பது சாதியல்ல; ஆரியம் – சாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல்” என்று பதிவிட்டுள்ளார்.