வரி ஏய்ப்பு செய்தாரா?: சரத்குமாரிடம் 4-வது நாளாக விசாரணை!

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரிடம் வருமான வரி அதிகாரிகள் 4-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) தீவிர விசாரணை நடத்தினர். அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா அதிகம் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில், தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், அவரது உறவினர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், நண்பர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த 7ஆம் தேதி சோதனை நடத்தினர்.

கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா அலுவலகங்கள், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் ஏராளமான ஆவணங்கள், பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் அதிகாரிகள் கடந்த 10ஆம் தேதி விசாரணை நடத்தினர். சரத்குமாரிடம் மட்டும் 7 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

நடிகை ராதிகா சரத்குமாருக்குச் சொந்தமாக சென்னை தேனாம்பேட்டை ஜெயம்மாள் தெருவில் உள்ள ராடன் மீடியா அலுவலகம், தி.நகர் பவுல் அப்பாசாமி தெருவில் உள்ள ராடன் மீடியா அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த 11ஆம் தேதி சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தேனாம்பேட்டை ராடன் மீடியா அலுவலகத்துக்கு சரத்குமாரை அழைத்து வந்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோர் 12ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ஒரே காரில் நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்தினர். சரத்குமாரின் வீடு, அலுவலகம், ராடன் மீடியா அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இந்நிலையில், வருமானவரி அலுவலகத்தில் சரத்குமார் இன்று மாலை 3 மணி அளவில் மீண்டும் ஆஜரானார். 4-வது நாளாக இன்றும் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் சரத்குமார் ரூ.7 கோடி பெற்றதாகவும், ரூ.4.97 கோடிக்கு அவர் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களின்பேரில் விசாரணை நடக்கிறதா? அல்லது வேறு காரணங்களா என்பது தெரியவில்லை. இது சம்பந்தமாக வருமான வரி அதிகாரிகளோ, சரத்குமாரோ இதுவரை வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவும் இல்லை.

விசாரணை முடிந்து வருமான வரி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘வரி ஏய்ப்பு நடந்ததாக கூறி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்தும் விளக்கம் கேட்டனர். எப்போது அழைத்தாலும் விசாரணைக்குத் தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் கடந்த 10ஆம் தேதி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று காலை வருமான வரி அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வருமானவரி அலுவலகத்துக்கு 12ஆம் தேதி நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவரிடம் மேலும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.