தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  இயக்குநர் டி.பி.கஜேந்திரன்  கவிதை வடிவில் நன்றி

தமிழ்நாடு முதல்வர்  முக.ஸ்டாலின் இயக்குநர் டி.பி.கஜேந்திரனை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பிற்காக முதல்வருக்கு இயக்குநர் டி.பி.கஜேந்திரன் நன்றி தெரிவித்திருக்கிறார். இது குறித்து கவிதை வடிவில்  அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

முத்துவேலர் பேரனே,

முத்தமிழ் அறிஞரின் மைந்தனே,

கழகத்தின் தளபதியே

தமிழகத்தின் முதல்வரே

உன் நல்லாட்சியில் வாழும்

நான் ஒரு சிறு குடிமகன்

தூரத்திலிருந்து உன் முகம் பார்த்து

துன்பத்தை துரத்தும் சிறியவன்

கல்லூரி காலத்தில்

புத்தகம் பார்த்து படித்ததை விட

உன் முகம் பார்த்து படித்தது ஏராளம்

படங்களை நான் இயக்கினாலும்

என்னை இயக்கியது நீங்களல்லவா?

குசேலனை தேடி வந்த

கிருஷ்ணன் போல

என் வீடு தேடி வந்தாய்

நான் வீடுபேறு அடைந்தேன்

நலம் விசாரித்து, நற்பரிசு தந்து

நானிலம் போற்ற நின்றாய்

நீங்கள் என் நண்பன் என்பதே

நான் பெற்ற செல்வம்

நட்புக்கு இலக்கணம் வகுத்தவனே

வாழும் நாளெல்லாம்

உனை நினைப்பேன்

உனை மறக்க நேரிடின் மரிப்பேன்

அன்புடன்

டி.பி.கஜேந்திரன்.

முதல்வருடன் வந்து

முழு அன்பைத் தந்த

பொய்யாமொழியின் புதல்வருக்கும்,

கழகத்தின் செயல்வீரர் பூச்சி முருகனுக்கும்

நன்றிகள் கோடி.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் டி.பி.கஜேந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்