“சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம் என்னிடம் உள்ளது!” –திலீபன் மகேந்திரன்

சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம், தம்மிடம் உள்ளதாக அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக கூறி பேஸ்புக்கில் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன் தகவல் பதிந்திருந்தார். இந்நிலையில் தம் மீது அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் திலீபன் மகேந்திரன், கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து சிறையிலிருந்து நிபந்தனை பிணையில் திலீபன் மகேந்திரன் இன்று விடுவிக்கப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறையில் மனநிலை பாதித்தவர்களோடு தம்மை அடைத்து வைத்து  போலீசார் கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். மேலும், சுவாதி படுகொலை வழக்கின் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டிப்பாக அம்பலப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.