கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார்

இலங்கையில் வரலாறு காணாத வகையில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடும், பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு வெகுமக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோரி வீதிக்கு வந்த போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு, அதை கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

0a1eஉயிருக்கு பயந்த கோத்தபய ராஜபக்சே, தனது மனைவியுடன் இலங்கையை விட்டே தப்பிச் சென்றார். மாலத்தீவு சென்ற அவர் அங்கிருந்தபடி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தார். அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், அவசர நிலையை பிரகடனம் செய்தார் ரணில்.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே மாலத்தீவில் கோத்தபயவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்து தனிப்பட்ட பயணமாக அவர் சிங்கப்பூரில் நுழைய அனுமதித்துள்ளதாகவும், அவர் அடைக்கலம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.