முன்னாள் மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்

முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி வயது மூப்பு, சிறுநீர்க பாதிப்பு, பக்கவாத பாதிப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை மரணம் அடைந்தார்.. அவருக்கு வயது 89.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோம்நாத் சட்டர்ஜி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 10 முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மக்களவைத் தலைவராக பதவி வகித்தவர்.

அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றபோது, மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அவரை கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால், பதவி விலக மறுத்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் மக்களவைத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு அவர் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

சோம்நாத் சட்டர்ஜி கடந்த 40 ஆண்டுகளாகவே சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வயது மூப்பு, சிறுநீரக பாதிப்பு காரணமாக  கடந்த மாதம் அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஐந்து நாட்களாக அவருக்கு வென்டிலேட்டர்  பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர்  இன்று காலை உயிரிழந்தார்.

சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.