விஸ்வரூபம் 2 – விமர்சனம்

‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகத்தை சற்று நினைவு கூர்வோம்…

இந்திய மக்களின் வரிப்பணத்தில் கொழுத்த சம்பளம் வாங்கும் ‘ரா’ உளவுத்துறை அதிகாரியான கமல்ஹாசன், இந்தியாவுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்குள், அமெரிக்காவுக்கு ஆதரவாக மூக்கை நுழைத்து வினையை இழுக்கிறார். தானொரு தீவிரவாதி என்று பொய்யாய் காட்டிக்கொண்டு, ஆபகானிஸ்தானுக்குள் நுழைந்து, அல்கொய்தா அமைப்பினருக்கு பயங்கரவாத பயிற்சி அளிப்பது போல் சீன் போட்டுக்கொண்டே அந்த அமைப்பின் தலைவர் பின்லேடனை கொல்ல உதவுகிறார்.

இதன்பின், அமெரிக்காவை அணுஆயுதத்தால் அழிக்க தாலிபன் தீவிரவாத அமைப்பின் தலைவர் உமர் (ராகுல் போஸ்) சதி செய்திருப்பதை அறிந்துகொள்ளும் கமல்ஹாசன், தானொரு நடன ஆசிரியர் என்ற போர்வையில் அமெரிக்காவுக்குள் நுழைகிறார். அங்கே அவருடைய மனைவியாக பூஜாகுமாரும், நடனம் பயிலும் மாணவியாக ஆண்ட்ரியாவும் இருக்கிறார்கள்.

உமரின் சதியை முறியடித்து அமெரிக்காவை காப்பாற்றுகிறார் கமல்ஹாசன். எனினும், அவரிடம் உமர் சிக்காமல் இந்தியாவுக்குப் பறந்துவிடுகிறார். “நீ எங்கே போனாலும் விட மாட்டேன்” என சூளுரைக்கிறார் கமல்ஹாசன். “யுத்தம் இந்தியாவில் தொடரும்” என்ற அறிவிப்புடன் ‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகம் முடிவடைகிறது.

#

இனி ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகம்.

அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் சென்ற தாலிபன் தீவிரவாத அமைப்பின் தலைவர் உமரை (ராகுல் போஸை) தேடி, மனைவி பூஜாகுமார், சினேகிதி ஆண்ட்ரியா சகிதம் பயணக்கிறார் ‘ரா’ உளவுத்துறை அதிகாரியான கமல்ஹாசன்.

லண்டனில் கமல் வகையறாவைப் பழிதீர்க்க உமர் சதித் தீட்டம் தீட்ட, அதை வெற்றிகரமாக முறியடிக்கிறார் கமல். அங்கே 1500 டன் எடை கொண்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்படுகிறது. டபுள் கேம் ஆடும் உயர் அதிகாரி ஒருவரால் கமல் உயிருக்கே ஆபத்து நேர்கிறது. உமராலும் பேராபத்து தொடர்கிறது. இவற்றை கமல் எப்படி சந்திக்கிறார், அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதற்கு ’விஸ்வரூபம் 2’ விடை சொல்கிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் கமல் தன்னை மிகச் சரியாக இதில் நிறுவியிருக்கிறார். நளினம் மிகுந்த கதக் நடன ஆசிரியராக இருக்கும் விஸ்வநாத்தின் நதிமூலம், ரிஷிமூலம் இதில் சரியாக வெளிப்படுகிறது. ராணுவ அதிகாரியாக இருந்து தீவிரவாதியாகக் கட்டமைக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து இந்திய உளவுத்துறை அதிகாரியாக பரிமாணம் அடையும் காட்சிகள் திரைக்கதை நகர்த்தலுக்கு வினையூக்கியாக வேகமுகம் காட்டுகிறது.

கமல் மீதான காதலில் கிறங்குவதிலும், கணவனுக்காக ரிஸ்க் எடுத்து 1500 எடை கொண்ட வெடிகுண்டின் தன்மையைப் பரிசோதிப்பதிலும் பூஜாகுமார் கவனிக்க வைக்கிறார். பூஜாகுமார் மீதான பொறாமையை லேசுபாசாக வெளிப்படுத்துவது, கமல் மீதான அன்பை திடமாக உணர்த்துவது, ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துவது என ஆண்ட்ரியா ஆச்சர்யப்படுத்துகிறார்.

கமலின் மிகச் சிறந்த வழிகாட்டியாக தன்னை வடிவமைத்துக்கொண்ட சேகர் கபூர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குண்டுகள் பாய்ந்த நிலையில் கமலுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அக்காட்சி செம்ம.

நின்று நிதானித்து உமர் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார் ராகுல் போஸ். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சூழ்ச்சியில் சிக்க வைத்து நாடகமாடும் ஆனந்த மகாதேவனும், கமலின் அம்மாவாக அழுத்தமான நடிப்பைத் தந்த வகீதா ரஹ்மானும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஷாம்தத் சைனுதீன் லண்டன், ஆப்கானிஸ்தான், டெல்லியின் பரப்பைக் கண்களுக்குள் கடத்துகிறார். லால்குடி என்.இளையராஜாவின் ஆப்கானிஸ்தான் தீவிரவாதக் கும்பல் குறித்த செட், தண்ணீருக்குள் நிகழும் சண்டைக்காட்சி ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரானின் இசையில் நானாகிய நதிமூலமே ரசிக்க வைக்கிறது. நான் யாரென்று தெரிகிறதா பாடலை உல்டாவாக்கிய ஞாபகம் வருகிறதா பாடல் மெதுவான பீட்டாக இருப்பதால் வெறுமனே கடந்துபோகிறது. பின்னணி இசையில் ஜிப்ரானின் உழைப்பு பளிச்சிடுகிறது. இந்தக் காட்சி தேவையே இல்லை என்று சொல்லாத அளவுக்கு நறுக்கென்று காட்சிகளைக் கோத்த விதத்தில் மகேஷ் நாராயணனும், விஜய் சங்கரும் வியக்க வைக்கிறார்கள்.

படத்தில் சவால்கள் குறைவாக உள்ளதால் அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் நாயகனுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் இரண்டாம் பாதி பெரிதாக ஈர்க்கவில்லை. அதை முட்டுக்கொடுப்பதற்காக கமல் அம்மா போர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை. நாயகன் எந்த சாகசத்தையும் செய்யாமல், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தாமல் எதிரிகளை சாதாரணமாகவே அணுகுவது எடுபடவில்லை. 64 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது காட்சியாக இல்லாமல் வசனமாக நகர்வதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதுவும் அந்த கிளைமாக்ஸ் பலவீனம்.

‘விஸ்வரூபம் 2’ – கமலின் அதிதீவிர ரசிகர்களுக்குப் பிடிக்கக் கூடும்!