“காவி இருள் நெருங்குதடா” பாடலை பாடிய கோவன் கைது!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவர் கண்ணையா குமார் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும், பட்டியாலா உயர்நீதிமன்ற வளாகத்திலேயே மாணவர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ். குண்டர்களை கைது செய்யக் கோரியும், இன்று (18-2-2016) காலை 11.30 மணி அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சார்ந்த புரட்சிகர பாடகர் கோவன் கலந்துகொண்டு பாடல் ஒன்றை பாடினார். “நெருங்குதடா! இருள் நெருங்குதடா! காவி இருள் நெருங்குதடா!” என்ற பாடலைப் பாடி, பரவிவரும் பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தினார். மேலும், கருத்துரிமைக்கெதிராக மாணவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி.யின் பாசிச முகத்தை அம்பலப்படுத்துமாறு கார்ட்டூன்கள் வரையப்பட்ட பதாகைகளை கொண்டு வந்திருந்தனர். சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் முழக்கமிட்டவாறே போராட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் கைதாகினர்.

“தொடர்ச்சியாக போராட்ட பாரம்பரியமிக்க ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை கைப்பற்றும் நோக்கத்தில்தான் இப்படி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதும், போராடும் மாணவர்களை RSS ரவுடிகளை கொண்டு தாக்குவதுமாக உள்ளது. இந்த கொடூர தாக்குதலை புமாஇமு வன்மையாக கண்டிக்கிறது. கடந்தாண்டு சென்னை ஐஐடி வளாகத்தில் இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு தடை விதித்தது, அதேபோல் ஹைதராபாத் பல்கலைக்கழக அம்பேத்கர் அமைப்பை தடை செய்து மாணவர் ரோகித் வெமுலாவை தூக்கில் ஏற்றியது, இப்போது JNU மாணவர் தலைவர் மீது தேசத்துரோக வழக்கை பதிந்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக உயர்கல்வி கூடங்களில் RSS பார்ப்பனிய ஆதிக்கத்தை நிறுவ ஜனநாயக, முற்போக்கு சக்திகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதனை முறியடிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்” என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் த.கணேசன் கூறியுள்ளார்.