‘நாயுடன் நடித்ததை விட மீனுடன் நடித்தது பெரிய சவாலாக இருந்தது!” – சிபிராஜ்

சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும்  ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) திரைக்கு வருகிறது.

அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி,  ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் இப்படத்தை ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சரவணன் வெளியிடுகிறார்.

‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நாயகன் சிபிராஜ் கூறுகையில், “நாய்கள் ஜாக்கிரதை படத்தில் என்னுடன்  நடித்தது ஒரு நன்கு பயிற்சி பெற்ற நாய் என்பதால், எனக்கு நடிப்பதற்கு  அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் இந்த மீனுடன் நடித்தது பெரிய சவாலாகவே இருந்தது. ஏனென்றால், சில காட்சிகளில் நாங்கள் நன்றாக நடித்து இருப்போம், ஆனால் அந்த காட்சிகளில் மீன் ஓடி விடும். எனவே நாங்கள் பல ‘ரீ டேக்’  எடுக்க வேண்டியதாக போய் விட்டது.

நான் நடித்த முந்தைய படங்களை விட  ‘கட்டப்பாவ காணோம்’  படத்தில் எனக்கு  காதல் காட்சிகள் அதிகமாகவே இருக்கிறது. ஆரம்பத்தில் எனக்கு பதட்டமாக இருந்தாலும்,  ஐஸ்வர்யா ராஜேஷின் சகஜமாக பழகக்கூடிய குணம், என்னை அந்த பதட்ட நிலையில் இருந்து வெளியே கொண்டுவந்து விட்டது.

சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன் போன்ற மூத்த கலைஞர்கள்,  காளி வெங்கட், யோகி பாபு போன்ற  புதிய கலைஞர்கள் மற்றும் பேபி மோனிக்கா என  எல்லா தலைமுறை கலைஞர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் பெற்று தந்திருக்கிறது.

“கட்டப்பாவ காணோம் திரைப்படம் எல்லாத் தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் நிச்சயம் கவரும்” என்றார் நம்பிக்கையுடன்.