டாஸ்மாக் பணியாளரின் காதல் கதை ‘பகிரி’: 16ஆம் தேதி ரிலீஸ்!

வருகிற 16ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘பகிரி’. இப்படத்தில் நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நாயகனாக நடித்தவர். நாயகி ஷ்ரவியா.  இவர் ஆந்திர வரவு. இவர்களுடன் ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் என பல இயக்குனர்கள் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்கள். திருமாவேலன், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

‘மீரா ஜாக்கிரதை’, ’பைசா’ ஆகிய படங்களை வெளியிட்ட  வொயிட் ஸ்க்ரீன் சார்பில் எம்.அந்தோணி எட்வர்ட் ‘பகிரி’யை வெளியிடுகிறார். இசக்கி கார்வண்ணன் இயக்கி இருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் கூறுகையில், “தமிழ் திரையுலகில் முதன்முறையாக மதுபானக் கடையில் வேலை செய்பவர்களை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘பகிரி’. மதுபானக் கடையாக இருந்தாலும், இதுவும் அரசாங்க வேலை தானே என்று நாயகனும், நாயகியும் டாஸ்மாக் வேலையில் சேருகிறார்கள். கடை கிடைக்கவில்லை என்பதால் தங்கள் வீட்டையே டாஸ்மாக்காக மாற்றி வியாபாரம் செய்கிறார்கள்.  அந்த வகையில் டாஸ்மாக் பணியாளர் ஒருவனின் காதல் கதை தான் ’பகிரி’.

“படம் முழுக்க டாஸ்மாக்கும், குடியுமாக இருக்கும். நாயகன், நாயகி ஆகிய இருவரது குடும்பத்து பெரியவர்களுமே குடிக்கு அடிமையானவர்கள். நாம் குடிப்பதற்கும், மதுவை விற்பதற்கும் தயங்குவதில்லை. ஏனென்றால் குடி நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஆனால், குடியின் விளைவுகளையும் படத்தில் விளக்கியுள்ளேன். படம் முடியும்போது படத்தை பார்த்த இளைஞர்களுக்கு, “நாம் செய்வது சரியா? நமக்கு சோறு போடும் விவசாயத்தை வெறுப்பது சரியா? “ என பல கேள்விகள் நிச்சயம் எழும்.

படத்தின் வசனங்கள் நிச்சயம் ஆட்சியாளர்களை குறி வைக்கும். அதற்காக நான் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் என்னிடம் “படம் பார்க்க நாங்கள் நேரம் குறைவாகத் தான் எடுத்துக்கொண்டோம். அதன்பின் எங்களை ஒரு நீண்ட  விவாதத்துக்கே அழைத்து சென்றுவிட்டது படம்’ என்றார்கள். இதே விவாதம் படம் வெளியான பிறகு தமிழ்நாடு முழுக்க நடக்கும். ஏனென்றால் நான் படத்தின் மூலம் கேட்டிருக்கும் கேள்விகள் எல்லாமே சாமானிய மக்கள் ஒவ்வொருவரின் மனதுக்குள் இருக்கும் கேள்விகள் தான். அவற்றை சாமானிய மக்களின் சார்பில் பதிவு செய்திருக்கிறேன். 

‘இந்த படம் ரிலீஸானால் உங்களைக் கொன்று விடுவார்கள்’ என்று தணிக்கைக் குழு உறுப்பினர்கள் நேரடியாகவே என்னை எச்சரித்தார்கள். நான் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தேன்.

படத்தின் ஒரு காட்சியில் தமிழகத்தின் முக்கிய இரு தலைவர்களின் வேடம் அணிந்தவர்கள் டாஸ்மாக்கில் வந்து சரக்கு கேட்டு கெஞ்சுவதுபோல ஒரு காட்சி வைத்திருந்தேன். அதை தணிக்கைக் குழுவினர் நீக்க சொன்னார்கள். நான் மறுத்தேன். ‘மதுபானக் கடை’ என்ற படத்தில் கடவுள் வேடம் அணிந்தவர்களே குடிப்பது போல காட்டினார்கள். தலைவர்கள் என்ன கடவுள்களைவிட பெரியவர்களா? என்று கேட்டேன். ஆனால் தணிக்கைக் குழுவினர் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.

அந்த காட்சி உள்பட 18 காட்சிகளை வெட்டச் சொல்லி விட்டார்கள். அப்படி வெட்டியும்கூட படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது சொல்லும் ஒரு படத்தை எடுத்தால் இதுதான் நிலைமையா என்று வேதனையடைந்தேன். யு/ஏ சான்றிதழ் என்பதால் வரிவிலக்கு கிடைக்காது. பரவாயில்லை. இளைஞர்கள் நல்வழி செல்ல வேண்டும் என்பதற்காக என் லாபத்தை விட்டுத் தர முடிவு செய்துவிட்டேன்’’ என்றார் ‘பகிரி’ இயக்குனர்.