செஞ்சிட்டாளே என் காதல – விமர்சனம்

நாயகன் எழில் துரை கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கறிஞரான தந்தை அஜய் ரத்னம், தாய், தங்கை என தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் தனது தங்கையின் தோழியான மதுமிலாவை பார்க்கும் நாயகனுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னர்  சில நாட்களுக்கு பிறகு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மதுமிலாவை மீண்டும் பார்க்க, அவள் மீதான ஈர்ப்பு காதலாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் தனது காதலை அவளிடம் தெரிவிக்க, மதுமிலாவும் சம்மதம் தெரிவிக்கிறாள்.

பின்னர், இருவரும் சந்தோஷமாக காதலித்து வருகின்றனர். நாயகன் எழிலுக்கு வேலை கிடைக்கவில்லை. அன்றாட பிழைப்புக்கு தனது அப்பாவையே நம்பி இருக்கிறான். இந்நிலையில், கல்லூரி தலைமை பொறுப்புக்கு தேர்தல் வர, அதில் மதுமிலாவும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறாள். இதையடுத்து, அவளுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் எழிலை பிரிய முடிவு செய்து அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இருப்பினும், அவள் பின்னாலேயே சுற்றிவரும் எழில், ஒரு கட்டத்தில் அவளை பிரிகிறார்.

எழில் அவளை பிரிந்த மனவேதனையில் தான் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து புதிய கம்பெனி ஒன்றை தொடங்கி சமுதாயத்தில் பேசும்படியான நிலைக்கு வருகிறார். அவரது கம்பெனியிலேயே பணிபுரியும் மற்றொரு நாயகியான அபிநயா, எழில் மீது காதல் கொண்டு, தனது காதலை எழிலிடம் தெரிவிக்கிறார். அபிநயாவிடம் தனது முதல் காதல் குறித்து தெரிவிக்கும் எழில், அதேநேரத்தில் மதுமிலாவை இன்னமும் காதலிப்பதாகவும் கூறுகிறார்.

மறுபக்கத்தில் எழிலை பிரிந்த மதுமிலா, தனது அடுத்த காதலில் தோல்வியடைந்து, பின்னர் மீண்டும் ஒருவரை காதலிக்க அந்த காதலும் தோல்வியடைகிறது. இந்த நிலையில், மதுமிலாவின் தந்தையான மைம் கோபி, எழிலும், மதுமிலாவும் காதலிப்பதாகக் கூறி எழிலின் பெற்றோரிடம் திருமண பேச்சுவார்த்தை நடத்துகிறார். இறுதியில், எழில் தன்னை வேண்டாமென்று ஒதுக்கிய மதுமிலாவுடன் ஒன்று சேர்ந்தாரா? அல்லது தன்னையே உருக உருக காதலிக்கும் அபிநயாவை திருமணம் செய்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.

நாயகன் எழில் துரை தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது செய்கைகளும், பேச்சும் ஒரு முதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. குறிப்பாக வசன உச்சரிப்புகள் அவருக்கு ஏற்றபடி எழுதியிருப்பதாகவே தெரிகிறது. நாயகி மதுமிலாவை பொறுத்தவரை, ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார். திரையில் அழகான தேவதையாக வரும் மதுமிலா, ஒரு கட்டத்திற்கு மேல் அவர் மீது வெறுப்பு ஏற்படும்படி நடித்திருப்பது சிறப்பு.

நடிகை அபிநயாவை பற்றி சொல்ல வேண்டியதில்லை. வாய்பேச முடியாதவர் என்றாலும், எப்போதும் போல தனது எதார்த்தமான நடிப்பால் கலக்கியிருக்கிறார். திரையில் அபிநயா வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ‘கயல்’ வின்சென்ட் காமெடியில் கலக்கி இருக்கிறார். மைம் கோபி, மகாநதி சங்கர் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

தனது முதல் படத்திலேயே இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகி உள்ள எழில் துரை சிறப்பான பங்களிப்பை தந்திருப்பதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். இந்த காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது காதலில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்பதை இப்படத்தின் மூலமாக தெளிவாக காட்டியிருக்கிறார். படத்தின் கதையை நிர்மானித்து, இயக்க முடிவெடுத்த எழில் துரை தனது திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கலாம். மற்றபடி அவரது இயக்கம் சிறப்பாக உள்ளது.

படத்தின் இசையை பொறுத்தவரை எஃப்.ராஜ்பரத் சிறந்த இசையை தந்திருக்கிறார். அவரது இசையில் ஒருசில பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம். லாரன்ஸ் கிஷோர் ஒளிப்பதிவில், இந்த கால இளைஞர்களின் காதலை சிறப்பாக காட்டியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில் ‘செஞ்சிட்டாளே என் காதல’ காதல் போராட்டம்.