“ரஜினி – மோடி கூட்டணி தமிழக அரசியலையே மாற்றிவிடும்” என்கிறார் குருமூர்த்தி!

“நரேந்திர மோடியையும் ரஜினிகாந்தையும் சேர்த்துப் பார்க்கும் தருணம் சிறப்பாக இருக்கும். இது தமிழ்நாட்டு அரசியலின் முகத்தையே மாற்றிவிடும்” என்று கூறியுள்ளார், ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த ஆரியத்துவவாதியும், ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியருமான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி.

தனியார் ஆங்கில தொலைக்காட்சி நேர்காணலில் அவர் கூறியதாவது:

ரஜினிகாந்த் தன் சொந்தக் கட்சியையே தொடங்குவார் என்பது என் கணிப்பு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகே தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த் பொருத்தமானவர்.

நரேந்திர மோடியையும் ரஜினிகாந்தையும் சேர்த்துப் பார்க்கும் தருணம் சிறப்பாக இருக்கும். இது தமிழ்நாட்டு அரசியலின் முகத்தையே மாற்றிவிடும்.

தமிழ்நாடு அரசியலில் சில காலங்களாகவே திராவிட அரசியலின் தாக்கம் குறைந்து வருகிறது. ரஜினிகாந்த் வந்துவிட்டார் என்றால் திராவிட அரசியலின் தாக்கம் மேலும் குறையும்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழக அரசியல் குழப்பம் நிரம்பிய ஒன்றாக உள்ளது, கருணாநிதியின் உடல் ஆரோக்கியமும் குன்றியுள்ளது.

பாஜகவுக்கும் ரஜினிக்கும் நான் பாலமல்ல, இருவரும் ஒன்றிணைந்தால் நல்லது என்றே கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் குருமூர்த்தி.