ரூபாய் – விமர்சனம்

வாழ்க்கையில் எல்லா தரப்பு மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது பணம். அந்த பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தில் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதையும் காதல் கலந்து சொல்ல வந்திருக்கிறது ‘ரூபாய்’.

நாயகன் சந்திரனும், நண்பன் கிஷோர் ரவிச்சந்திரனும் நண்பர்கள். டெம்போ வேனில் லோடு அடிப்பவர்கள். தேனியில் காய்கறி லோடு ஏற்றிவந்து சென்னை கோயம்பேடில் இறக்குகிறார்கள். அதற்கு கிடைக்கும் கூலியை வைத்து டெம்போ வேனின் கடன் தவணையான ரூ.18 ஆயிரத்தை அடைக்க திட்டமிடுகிறார்கள். பணம் போதாததால், சென்னைக்குள் ஒருமுறை சவாரி அடிக்கிறார்கள்.

அப்போது கடன் தொல்லை காரணமாக வீட்டை மாற்றும் சின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகள் நாயகி ஆனந்தியின் அறிமுகம் அவர்களுக்குக் கிடைக்கிறது. வாடகை பேசி, சின்னி ஜெயந்த் வீட்டு சாமான்களை வேனில் ஏற்றிக்கொண்டு வீடு தேடுகிறார்கள். ஆனந்தியைப் பார்த்ததும் சந்திரனுக்கு காதல் வருகிறது.

இதற்கிடையே, தனியார் நிதி நிறுவனத்தில் பெரும் தொகையை கொள்ளையடிக்கும் ஹரிஷ் உத்தமன், போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க, பணப்பையை இவர்களது வேனில் போட்டுவிடுகிறார். கூடவே, அந்த வேனையும் ஹரிஷ் தவற விடுகிறார். அந்த பணம் என்ன ஆனது? சந்திரன் – ஆனந்தி காதல் கைகூடியதா? ஹரிஷ் இவர்களைப் பிடித்தாரா? போலீஸார் ஹரிஷைப் பிடித்தார்களா? என்பது மீதி கதை.

‘சாட்டை’ படம் இயக்கிய அன்பழகனின் 2-வது படம் இது. சாலையைக் கதைக் களமாக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் கதையில், சாமானிய மனிதர்களையும், அவர்களது ஆசாபாசங்களையும் கொண்டுவந்து பொருத்தியுள்ள இயக்குநரின் சாமர்த்தியத்தை பாராட்டலாம். நிதி நிறுவனத்தில் ஹரிஷ் கொள்ளையடிக்கும் காட்சி தர்க்கரீதியில்  நம்பகமாக அமைய வேண்டும் என்பதில் இயக்குநர் மிகுந்த ஈடுபாடு காட்டியிருக்கிறார்.

‘கயல்’ படத்தில் நடித்த சந்திரன் தனது வழக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனந்தியை உருகி உருகி காதலிக்கிறார்.

கயல் ஆனந்தி இதற்கு முன்பு நடித்த படங்களைப் போல இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மேக்கப் ஏதுமின்றி நடித்திருப்பது சிறப்புக்குரியது. நமக்கு சொந்தமில்லாத பணத்துக்கு ஆசைப்படுவது தவறு என்று சொல்லும் இடத்தில் ஆனந்தி நெகிழ வைக்கிறார்.

படம் முழுவதுமே சின்னி ஜெயந்த் தனது குணச்சித்திர வேடத்தால் தாங்கிப் பிடிக்கிறார்.

குறைவான காட்சிகளில் வந்திருந்தாலும் ஹரீஷ் உத்தமன் மிரட்டியிருக்கிறார். அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சந்திரனின் நண்பனாக வரும் கிஷோர் ரவிச்சந்திரனின் நடிப்பும் கச்சிதம்.

வி.இளையராஜாவின் ஒளிப்பதிவு அருமை. சாலையில், வளைவுகளில், மலைப்பாதைகளில், மலை கிராமங்களில் அவரது கேமரா காட்டியிருக்கும் துடிப்பும் வேகமும் நிதானமும் அபாரம்.

இமானின் இசையும், யுகபாரதியின் வரிகளும் ரசிப்புக்கு உரியவை. ஸ்ரேயா கோஷலின் குழைவான குரலில் ஒலிக்கும் ‘உன்கூட பேசத்தானே’, அனிதா வெங்கட்டின் கொண்டாட்டமான குரலில் ஒலிக்கும் ‘டுக்கும் டுக்கும்’ என்ற கிராமத்து முளைப்பாரி திருவிழா பாடல் ஆகியவற்றில் யுகபாரதி வழக்கமான தன் மண்வாச முத்திரையைப் பதித்திருக்கிறார்.

நமக்கு சொந்தமில்லாத பணத்துக்கு ஆசைப்பட்டால் கெடுதலில் போய் முடியும் என்ற நல்ல கருத்தை வலுவாகச் சொல்வதால்…

‘ரூபாய்’  – மதிப்புக்குரிய படம்!