தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்ஸி ஊதிய ஒப்பந்தம் ரத்து: விஷால் திடீர் அறிவிப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தலைமையில் அச்சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின், “தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஃபெப்ஸி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கும் இடையிலான ஊதிய ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது” என விஷால் அறிவித்தார். மேலும், “தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களில் தங்களுக்கு விருப்பப்பட்ட யாரை வேண்டுமானாலும் பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இடையே பல நிலைகளில் சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், சம்மேளனத்தில் அங்கமாக இருக்கும் ஒரு சில அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட்டு, அடிக்கடி பேச்சுவார்த்தை மற்றும் படப்பிடிப்புகளில் தடங்கல்களை ஏற்படுத்தி, தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்புகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வருகிறார்கள்.

தொழிலாளர் சம்மேளனம் அவற்றை கண்டுகொள்ளாமலும், தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர்களை இழிவுபடுத்துவதை கண்டிக்காமலும் இருந்து வருகிறது.

இது போன்ற விசயங்கள் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. இவற்றால் ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தி, இறுதியில் அவர்களாகவே ஒரு சம்பளம் நிர்ணயித்து, அராஜக முறையில் தயாரிப்பாளர்களின் பலவீனத்தை பயன்படுத்தி அதையே நிரந்தரமான சம்பளமாகவும் நிர்ணயித்து விடுகிறார்கள்.

ஆனால், இனிமேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களை கைவிட இயலாது.

சம்மேளனமோ, தொழிலாளர்களோ, தயாரிப்பாளர்களுக்கு எதிரி அல்ல. உழைக்கும் தொழிலாளர்களுக்கு அதற்குரிய ஊதியத்தை முறையாக வழங்குவது தயாரிப்பாளர்களின் கடமை ஆகும். அதேவேளையில் அநியாயமான முறையில் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவதை ஒருபோதும் ஏற்க இயலாது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயிக்கும் சம்பள விவரங்களின்படி தயாரிப்பாளர்கள் தங்களின் படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

அதே போல் இன்று  (25.07.2017) முதல் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு உடன்படும் யாருடனும், தேவையான அளவில் ஆட்களை வைத்து வேலை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.