“இந்த கோமாளியை தான் சென்னை உயர் நீதிமன்றம் தலையில் வைத்து கொண்டாடுகிறது!”

பொன் மாணிக்கவேல் சிலைகளை பிடிப்பது எப்படி ?

‘சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல, “ஒரு நல்ல பாம்பு பல வருடங்களாக யாரையுமே கடிக்காமல் அதன் விஷத்தை சேர்த்து வைத்து அதை ஒரு மாணிக்க கல்லாக கக்கி உள்ளது. அது மிக மிக அரிய பொருள். யாராவது நல்ல பார்ட்டி இருந்தா சொல்லு” என்ற கதையை உங்களில் பலர் கேள்வி பட்டிருக்கலாம்.

அதைப் போலவே பல மோசடி பேர்வழிகள் சுற்றிக் கொண்டிருப்பதையும் அறிவீர்கள். ராஜஸ்தான், டெல்லி போன்ற இடங்களில் பச்சை கல்லில் சிவலிங்கம், நந்தி போன்ற சிலைகள் 2000 முதல் 5000 ரூபாய் வரை கிடைக்கும்.

இப்படி ஒரு சிலையை ஒருவன் டெல்லியில் இருந்து வாங்கி வந்து சென்னையில் அதை “மரகத சிலை” என்று விற்பனை செய்ய முயற்சி செய்கிறான். ஒரு பார்ட்டி சிக்குகிறது. அந்த பார்ட்டியிடம் 25,000 ரூபாய் என விலை சொல்கிறான். அந்த பார்ட்டி பேரம் பேசிக்கொண்டு இருக்கையிலேயே இன்னொரு பார்ட்டி சிக்குகிறது. இரண்டாவது பார்ட்டியிடம் 50,000 ரூபாய் விலை சொல்கிறான். இரண்டாவது பார்ட்டி அந்த விலைக்கு ஒப்புக் கொள்ளவும், 50,000 ரூபாய்க்கு சிலையை விற்பனை செய்ய முயற்சி செய்கிறான்.

முதல் பார்ட்டி காண்டாகிறான். இரண்டாவது பார்ட்டியிடம் சிலை கைமாறும் அன்று பொன் மாணிக்கவேலை அழைத்து, “அய்யா அரிய மரகத சிலையை ஒருவன் கடத்திக்கொண்டு வந்து விற்பனை செய்கிறான். இந்த ஹோட்டலில் இந்த அறையில் தங்கியிருக்கிறான். உடனடியாக சென்றால் கைது செய்யலாம்” என்று கூறுகிறான்.

அந்த இடத்துக்கு கிளம்புவதற்கு முன்னதாகவே பொன் மாணிக்கவேல் பத்திரிகையாளர்களை அழைத்து, அரிய மரகத சிலை கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவலை தெரிவிக்கிறார்.

ஹோட்டலுக்கு சென்று, இருவரையும் கைது செய்து, பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டியளிக்கிறார். “இது ஒரு அரிய வகை மரகத சிலை. இதன் மதிப்பு 10 கோடி” என்று அளந்து விடுகிறார். ஒரே ஒரு முட்டாள் பத்திரிகையாளன் கூட “இது எந்த கோவிலில் காணாமல் போனது?. யார் புகார் அளித்தது?. இதன் மதிப்பு 10 கோடி என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?” என்று கேள்வி கேட்கவில்லை.

ஒரு சிலை புராதன அரிய சிலையா, இல்லையா என்று சான்றளிக்க வேண்டியது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் மட்டுமே. அப்ப்டி பொன் மாணிக்கவேல் கண்டுபிடித்த சிலையை ஆய்வு செய்த அந்த துறை அளித்த அறிக்கை என்ன தெரியுமா ?

“விளையாட்டு பொம்மை”

இதை விளையாட்டுக்கு சொல்லவில்லை. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் அளித்த அறிக்கை இன்னும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கோப்புகளில் உள்ளது.

இந்த கோமாளியைத் தான் சென்னை உயர்நீதிமன்றம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.

SHANKAR.A