“மிகப் பெரிய தவறுகள் நிரம்பியது ஜிஎஸ்டி!” – ப.சிதம்பரம்

ஜிஎஸ்டி வரி முறை முழு நிறைவானதல்ல; மேலும் மிகப் பெரிய தவறுகள் நிரம்பியது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“பெரும்பான்மை சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் மீது திணிக்கப்பட்ட நிறைவற்ற, தவறுகள் நிரம்பிய ஜிஎஸ்டி வரியாகும் இது. நாடு இதற்குத் தயாராகாதபோது, இதில் உள்ள சிக்கல்கள் அகற்றப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும்போது, பாஜக அரசு தனது பதற்றத்துடன் இதனை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த நியாயமான விமர்சனங்களை பாஜக புறக்கணித்தது.

இந்த ஜிஎஸ்டி வரி முறை நிபுணர்களால் தயாரிக்கப்பட்டதல்ல. தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆலோசனை இல்லாதது இந்த ஜிஎஸ்டி. காங்கிரஸ் சிந்தித்த ஜிஎஸ்டி அல்ல இது, மேலும் நாட்டுக்கு தகுதியான ஜிஎஸ்டி அல்ல இது.

துல்லியமற்றதுடன் கூடுதலாக பலதரப்பட்ட சமரசங்களும் இதில் நிகழ்ந்துள்ளன. இதன் பெரிய தவறுகள் உள்ள பகுதி பலதரப்பட்ட வரிவிதிப்பாகும். மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்குமே இதில் அதிகாரம் உள்ளது. இதுவும் பெரிய பிரச்சினைதான். பெட்ரோலியம் பொருட்களை இதற்குள் கொண்டு வராமல் விட்டது, மின்சாரம், மதுபானம், ரியல் எஸ்டேட்டின் பல பகுதிகள் ஆகியவையும் ஜிஎஸ்டியில் இல்லை. இதில் வெறுக்கத்தக்க பகுதி என்னவெனில் லாபத்துக்கு எதிரான பிரிவு. இந்தக் குழப்பமான பிரிவை வடிவமைத்தவர்களுக்கு பொருளாதாரம், வணிகம், சந்தைப் பொருளாதாரம் என்று எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2 அல்லது 3 மாதங்கள் தள்ளிப்போட்டிருந்தால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. சோதனை ஓட்டங்கள் இன்றி அவசரம் அவசரமாக பதற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு இதற்குத் தயாராக இல்லாதபோது இந்த ஜிஎஸ்டி திணிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய தவறு. இந்தத் தவறுக்கு அதிக விலை கொடுக்காமல் இருப்போம் என்று நம்புவோமாக.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஜிஎஸ்டி வரி முறையை 2012 அல்லது 2013-ல் அறிமுகம் செய்யலாம் என்று விரும்பியபோது பாஜக ஒத்துழைக்க மறுத்தது. ஆனால் இப்போது பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி வரிக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது” என்றார் ப.சிதம்பரம்.