நீளிரா – விமர்சனம்

அன்புள்ள இயக்குநர் சோமிதரன்,

இன்னும் நிறைய படங்கள் நீங்கள் எடுப்பீர்கள். வணிக சினிமாவுக்குள் ஆட்படலாம். அங்கு வெற்றி வாகையும் நீங்கள் சூடலாம். ஆனால் ’நீளிரா’ உங்களின் அற்புதமாக என்றும் நீடிக்கும்.

சில காலத்துக்கு முன் ’குப்பி’ என ஒரு படத்தை பார்த்திருக்கிறேன். ஒரு வீட்டுக்குள் கதாபாத்திரங்களை வைத்து மெல்லிய அரசியலினூடாக பதைபதைப்பை உருவாக்கிய விதம் அச்சமயத்தில் ஆச்சரியப்படுத்தியது. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான சிவராசனை கைது செய்ய நடத்தப்பட்ட வேட்டையின் ஒரு நாள் இரவாக அப்படம் நீண்டிருந்தது. தமிழ்நாட்டு மக்களின் தரப்பிலிருந்து பேசுவதாக சொல்லி இந்திய தரப்பை கமுக்கமாக பேசியது அப்படம்.

பிறகு ஈழப்போர் முடிவுற்ற தாக்கத்தில் இருந்து பல இயக்குநர்கள் ஈழம் மற்றும் போராளிகள் பற்றிய படங்களை எடுத்தனர். அவற்றில் கல்மிஷமான படங்களை ஒதுக்கிவிட்டால், உண்மையில் ஈழம் மற்றும் ஈழப் போராட்டம் சார்ந்த பரிவோடு எடுக்கப்பட்ட படங்களும் நிறைய இருந்தன. ஆனால் தமிழ்நாட்டு தமிழர்களின் பார்வையிலிருந்து பெரும்பாலானவை எடுக்கப்பட்டிருந்தன. ஈழம் சார்ந்து எடுக்கப்பட்டவை பலவற்றில் அந்த மண்ணின் யதார்த்த வாழ்வும் பதியப்பட்டிருக்கவில்லை.

முதன்முதலாக உங்களின் ’நீளிரா’ ஈழப் போராட்டத்தின் ஓர் இரவை அச்சு அசலாக காட்டியிருக்கிறது. ஈழ மாந்தரும் பரப்பும் எங்களுக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. அப்படம் கொண்டிருக்கும் எளிமை, அது பேசும் உண்மையின் எளிமையை பிரம்மாணடமாக்கி விடுகிறது. எனவேதான் சொல்கிறேன், ”நீளிரா’ தமிழ்ச்சமூகம் கைப்பெற்ற அற்புதம்!

போராளிகளை ”ரத்தம் சுவைக்கும் பாசிஸ்டுகள்” என கதை பேசித் திரியும் கயமைக் கூட்டத்துக்கு இப்படம் பேரிடியாக இறங்கும். அவர்களின் போராட்டம் எத்தனை அறம் சார்ந்தது என்பதை நாம் பேசி வந்திருக்கிறோம். நீங்கள் அதை காட்சிப்படுத்தி வரலாற்றுப்பதிவு ஆக்கி இருக்கிறீர்கள். ”போராளிகள் இடதுசாரிகள் இல்லை” என்றெல்லாம் பேசித் திரியும் போலி இடதுகள் காண, களத்தில் கேஸ்ட்ரோ என்கிற பெயருடன் நின்ற போராளியை நீங்கள் காண்பித்துள்ளீர்கள். அதற்கும் நன்றி.

அமைதி காப்பு படை என்கிற பெயரில் சென்ற இந்திய ராணுவம், ஈழத்தில் ஆடிய அழிச்சாட்டியத்தின் ஒரு துணுக்காக அந்த வீட்டை படத்தில் ஆக்கி இருக்கிறீர்கள். ஒரு விஜயகாந்த் படத்தைக் கொண்டு ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டு தமிழர்களையும் தீவிரவாதிகளாக பார்க்கும் இந்தி பேசும் இந்திய ராணுவ வீரனே கிட்டத்தட்ட மொத்த அரசியலின் அடையாளமாக நின்று விடுகிறான்.

“போரை யார்தான் விரும்பினார்கள்?” என ஒரு போராளி பேசும் வசனமும் “வீட்டுக்குள்ளாவது அமைதி காக்க உதவுங்கள்” என பெண் பேசும் வசனம் என பல வசனங்களில் உண்மை பளீரென ஒளி வீசிவிடுகிறது.

குறிப்பாக Duel பாணியில் எல்லா தரப்பும் போரின் நுனியில் அமர்ந்திருக்கும் காட்சியில் ஓர் இயக்குநராக நீங்கள் உயரத்தை எட்டினீர்கள்.

மற்றபடி ஒரு கடப்பாடாக திரையரங்கில் இப்படத்தை பார்த்துவிட வேண்டும் என ஒற்றை நபராக சென்று பார்த்து வந்தேன். அதிக விளம்பரங்கள், முன்னேற்பாடுகள் இல்லை என்பதால் காட்சிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. குறைவான மக்களே திரையரங்கில் இருந்தோம். படம் முடியும் வரை அமைதியாக பார்த்து விட்டு, முடிந்ததும் அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பிவிட்டே அரங்கை விட்டு அகன்றார்கள்.

எனவேதான் சொல்கிறேன், இது உங்களின் வாழ்வு, உங்களின் மண், நாம் பார்த்த லட்சிய வீரர்களின் போராட்டம் ஆகியவற்றின் உன்னதங்களை சுமந்த உன்னத சினிமா.

நன்றியும் வாழ்த்துகளும்!

அன்புடன்,

ராஜசங்கீதன் ஜான் ராஜய்யா.

# # #

நடிப்பு: நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவையூர், சித்து குமரேசன், கபிலா வேணு, நவயுகா, ஸ்வாதி கிருஷ்ணா, நமச்சிவாயம் தம்பிபிள்ளை, கயல் வின்செண்ட், கஜராஜ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சோமிதரன்

ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பிரதீபன்

படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்

இசை: கே

தயாரிப்பு: ‘ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ’ கார்த்திகேயன் எஸ், கார்த்திக் சுப்புராஜ் & ’ஸ்பிரிட் மீடியா’ ரானா டகுபதி

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்