“ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் தலையிட முடியாது”: மோடி கைவிரிப்பு; ஓ.பி.எஸ். ஏமாற்றம்!

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக் கோரி முதல்வர் வலியுறுத்தினார். தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பிரதமரின் நிலைப்பாடு தொடர்பாக ட்வீட்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ட்விட்டர் பக்கத்தில், “ஜல்லிக்கட்டு விளையாட்டின் கலாச்சார முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், தற்சமயம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு உதவியாக இருக்கும் என பிரதமர் தமிழக முதல்வரிடம் தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என நரேந்திர மோடி பிடிவாதமாக கூறிவிட்டதால், ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றத்துடன் சென்னை திரும்புகிறார்.