தமிழர்கள் எதிர்ப்பு: ஏ.ஆர்.ரஹ்மான் கொழும்பு இசை நிகழ்ச்சி ரத்து!

வருகிற 23ஆம் தேதி 14 இசைக் கலைஞர்களுடன் இலங்கை தலைநகர் கொழும்பில் இசை நிகழ்ச்சி நடத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டிருந்தார். தமிழ் அமைப்புகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஹ்மானின் வீட்டுக்கு அருகே, ‘உலகத் தமிழினம் போற்றும் இசை மேதையே, 2 லட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ரத்தக் கறைபடிந்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா?’ என்கிற கேள்வியுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனையடுத்து, 23ஆம் தேதி நடக்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார் ரஹ்மான்.

எனினும் இதற்கு தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பே காரணம் என்று சொல்லாமல், தேர்தலை காரணம் காட்டியிருக்கிறார் ரஹ்மான். இது குறித்து அவர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் காரணமாக ஏப்ரல் 23 அன்று நடப்பதாக இருந்த இசை நிகழ்ச்சி, தள்ளி வைக்கும்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது. 14 இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சிக்காகத் திட்டமிருந்தோம். அது நிச்சயம் நடைபெறும். இந்த முடிவுக்காக யாரும் வருத்தப்படவேண்டாம். இசைக்கலைஞர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்ட பிறகு இசை நிகழ்ச்சி நிச்சயம் நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.