கமல்ஹாசனின் கட்சியிலிருந்து நடிகர் நாசர் மனைவி கமீலா விடுவிப்பு

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன்.  இந்த நேரத்தில் அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய  அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுகிறேன். நன்றிகள்” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து கமீலா நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் தலைமை அலுவலக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்து வந்த திருமதி கமீலா நாசர் அவர்கள் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்துள்ளார். 20-04-2021 (செவ்வாய்கிழமை) முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன்மூலம் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

0a1a