“விமர்சிப்பவர் மீது போலீசில் புகார் கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!” – சுரேஷ் காமாட்சி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது  ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும், சீமான்  காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளார்கள்.

‘புதிய கீதை’,’ கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ளார். பாலபரணி ஒளிபதிவு செய்துள்ளார்.

‘மிக மிக அவசரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், சீமான், நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

0a1b

விழாவில் கே.ராஜன் பேசும்போது, “இந்த படத்தில் ஒரு பெண் காவலர் என்ன பாடுபடுகிறார், பணிச்சுமையின் காரணமாக அவர் மனம் எப்படி எல்லாம் கொந்தளிக்கிறது என்பதை மிக அழகாக படமாக்கி இருக்கிறார்கள். இதை பார்த்தபோது நம் வீட்டுப் பெண்கள் இந்த அளவுக்கா கஷ்டத்திற்கு ஆளாகிறார்கள் என ஒரு பதைபதைப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் நாயகி ஸ்ரீபிரியங்கா மிக அழகாக அந்த கேரக்டரை வெளிப்படுத்தியுள்ளார்.

நானும் சுரேஷ் காமாட்சியும் காரில் வந்தபோது இந்த படத்தை வாழ்த்திப் பேசிய ஆர்ஜே. பாலாஜியிடம் போனில் பேச நேர்ந்தது. அப்போது என்னுடன் சுரேஷ் காமாட்சி என்கிற கலகக்காரனும் இருக்கிறான் பேசு என கொடுத்தேன். அவர் சுரேஷ் காமாட்சியிடம் பேசியபோது, என்ன 2 தீவிரவாதிகளும் ஒரே இடத்தில் இருக்கிறீர்கள் என எங்களுக்கு தீவிரவாதி முத்திரை குத்திவிட்டான்.. உண்மைதான்.. தமிழ் சினிமாவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், தமிழ் கலாச்சாரத்தை சிதைக்கும் விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு நாங்கள் தீவிரவாதிகள் தான்” உணர்ச்சி பொங்க பேசினார்

இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “எப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறான் என்கிறார்கள். உண்மையை பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படிதான் பேசுவேன். இந்த படத்தை பற்றி, படக்குழுவினரை பற்றி இந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசினால் தான் சரியாக இருக்கும்..

 படத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.. ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை.. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது போலீசில் புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை..

நாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.. சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை.. அவை குறையாக இருந்தாலும் நிறையாக இருந்தாலும் நமது படம் பேசுபொருளாக இருக்க வேண்டும்.. அது தான் முக்கியம்” என கூறினார்

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “இந்த படத்தின் திரைக்கதை டைரக்ஷன் சுரேஷ் காமாட்சி என்ற பெயர் பார்த்தபோது, கதையை யார் எழுதியிருப்பார்கள் என்கிற யோசனை கொஞ்ச நாளாகவே இருந்தது.. இங்கே வந்துபோதுதான் அது ஜெகன் என எனக்கு தெரிந்தது..

பொதுவாகவே கதாசிரியர்களுக்கு இங்கே பொருளாதார ரீதியாக மரியாதை சற்று குறைவாகவே இருக்கிறது அதிலும் நான் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு தான் அது நன்றாகவே தெரியவருகிறது.

தான் இயக்கும் முதல் படத்தில் கமர்ஷியலாக யோசிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கியதற்காகவே சுரேஷ் காமாட்சியை பாராட்டலாம்.. நானே பல மேடைகளில் சுரேஷ் காமாட்சி தொடர்ந்து காரசாரமாக பேசுவதை கவனித்து இருக்கிறேன் ஆனால் உன்னிப்பாக கவனிக்கும்போது தான் அவர் பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது தென்படும்” என்றார்.