ஆயிரக்கணக்கான தலித்துகள் கிராம நிர்வாக அலுவலராக வரும் சூழலை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்!

“இடஒதுக்கீடு, சாதி, தாலி மறுப்புத் திருமணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் சேர்ந்து திமுகவுக்கு எதிராக எம்.ஜி.ஆருடன் அணி சேர்ந்தனர்” என்கிறார்கள்.

ஆனால் உண்மையில், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட  பிறகு, அவருக்குத் துணையாக நின்றவர்களில் முக்கியமானவர்கள் பொதுவுடமை கட்சியினரும், முஸ்லிம் லீக் கட்சியினரும் என்பதுதான் வரலாறு.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு, 1982ஆம் ஆண்டு நீதியரசர் எஸ்.மகாராஜன் தலைமையில், கோயில் அர்ச்சகர் நியமனமுறை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு பரிந்துரைகள் செய்வதற்கான ஒரு குழுவை நியமித்தார். அந்த குழுவின் அறிக்கை, இன்றளவும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஆதரவான முக்கிய ஆவணமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் அந்த கோரிக்கைக்கு ஆதரவானவர் தான் என்பதற்கு இது ஒரு  சான்று.

ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்துவரும் முறையை ஒழித்து,  கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்,ஜி.ஆர். இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோதுதான், தெரு பெயர்களில் ஜாதிப்பெயர் இடம்பெறக் கூடாது என்கிற முக்கியமான அரசாணையைப் பிறப்பித்தார்.

 (முழு கட்டுரை படிக்க லிங்க்)