“19 ரூபாய் கட்டணத்தில் திரையரங்கில் படம் பார்க்கலாம்… வாங்க…!”

‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படமாகும் .தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியும் மக்களிடம் பேசப்பட்டது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘மதுரை டூ தேனி – 2’ என்று இப்போது உருவாகி இருக்கிறது.  போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ளது.

இந்த இரண்டாம் பாகத்தில் விஷ்வக், சிவகாசி பாலா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக செளமியா, தேஜஸ்வி நடிக்கிறார்கள். இவர்களுடன் முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டா மணி, சந்தானபாரதி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

விஷூவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்களின் படம் இயக்கும் கனவு நிறைவேறியதா, இல்லையா? என்பதே  கதை. இதை காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்து தேனியிலிருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஸ்யங்களோடு சொல்கிறது இந்தப்படம்.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவு செய்து தயாரித்துள்ளவருமான எஸ்.பி.எஸ். குகன்  பேசும்போது “இன்று ஏராளமாக படங்கள் எடுக்கப்படுகின்றன சிறு முதலீட்டுப் படங்கள் நிறைய எடுக்கப்படுகின்றன .ஏராளமாகப் படங்கள் எடுக்கப் படுவதால்  என்ன பயன்? எடுத்து வெளியிட முடியாமல் இருப்பதில் என்ன பெருமை?

சிறு படங்கள் எடுத்தால் வெளியிட திரையரங்குகள் கிடைப்பது இல்லை. போட்ட முதல் திரும்ப கிடைக்க எந்த உத்திரவாதமும் இல்லை. திரையரங்குகள் கேட்டால் கூட்டம் வருவதில்லை என்கிறார்கள். பெரிய படத்துக்கு மட்டுமே கூட்டம்  வருகிறது என்கிறார்கள். அதனால்தான் பெரிய படங்கள் மட்டுமே வெளியிடுகிறோம் என்கிறார்கள்.. அவர்கள் தரப்பில் தவறில்லை.

சினிமா என்பது கலைக்காக அல்ல. கலைக்காக படமெடுக்கிறேன் என்பதெல்லாம் பொய். கலைக்காக இலவசமாக படம் இயக்குவார்களா?  இலவசமாக  நடிப்பார்களா?  படம் தயாரிப்பார்களா? கலைக்காக படமெடுக்கிறேன் என்று  பேச்சுக்காக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சினிமா முழுக்க முழுக்க வியாபாரம் தான்.

பெரிய பட்ஜெட் படம் பார்க்க வருபவர்கள் அதே கட்டணத்தில் சின்ன பட்ஜெட் படம் பார்க்க வேண்டும் என்று சொல்வது எப்படிச் சரியாகும்? படம் பார்ப்பவன் கேட்கிறான், “ஏன்யா 5 லட்ச ரூபாயில் எடுத்த படத்துக்கும் 80 ரூபாய், 120 ரூபாய் டிக்கெட்.  50 கோடி ரூபாயில் எடுத்த படத்துக்கும் அதே 80 ரூபாய், 120 ரூபாய் டிக்கெட்டா?” என்கிறான் அது நியாயமான கேள்விதானே?

பட்ஜெட்டுக்கு ஏற்ற கட்டணம் நிர்ணயிங்கள், தயாரிப்புச் செலவுக்கு ஏற்ற கட்டணம் நிர்ணயிங்கள்  என்கிறோம்.

வெளியிட திரையரங்குகள் இல்லை, பார்க்க ஆளில்லை. அதையும் தாண்டி  வெளியிட்டால் 10 பேர்,  2 0 பேர் வந்தால் பார்க்கிங் வருமானமில்லை, கேண்டீன் வருமானமில்லை  நாங்கள் என்ன செய்வது? என்கிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதானே?

அதனால்தான் தயாரிப்புச் செலவுக்கு ஏற்றபடியான இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தின்படி, டிக்கெட் போடும் திட்டத்தை கொண்டு வருகிறோம். தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக தியேட்டர்களில் வெறும் 19 ரூபாயில் படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் விதமாக ஒரு மிகப் பெரிய முயற்சியை ‘நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ்’ நிறுவனம் ‘மதுரை டூ தேனி – 2’ படத்தின் மூலமாக செய்யவிருக்கிறது.

வருகிற மே மாதம் வெளியாகவிருக்கும் ‘மதுரை டூ தேனி – 2’ படத்தை ரசிகர்கள் தியேட்டரில் 19 ரூபாய் என்கிற குறைந்த கட்டணத்தில் பார்த்து ரசிக்கலாம். தொடர்ந்து தமிழில் குறைந்த செலவில் தயாராகும் தரமான படங்களை இதே கட்டணத்தில் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிக்கும்  வண்ணம் இந்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எங்களை மாதிரி சிறு முதலீட்டுப் படங்கள் வெளிவரவும் காப்பாற்றப்படவும்  இது உதவும்.

அதன்படி திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து வெளியிட இருக்கிறோம். இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தின்படி ஒரு படத்துக்கு 19 ரூபாய்தான் கட்டணம் வரும். ஊருக்குப் போகும்போது காத்திருக்கும் சமயத்தில் கூட ஒரு படம் பார்த்து விட்டு வந்துவிடுவார்கள் .19 ரூபாய்தானே கட்டணம்.? திருட்டு விசிடியைவிட குறைந்த கட்டணம் என்றால் பார்க்க வருவார்கள். மக்களை தியேட்டரை நோக்கி வரவழைக்கும் திட்டம் இது. நல்ல படங்கள் ஓடாத நிலை மாறும். நல்ல டீ குடிக்கவே 15 ரூபாய் ஆகும். எனவே, 19 ரூபாய் படம் என்றால் பார்ப்பான்.

திரையரங்குகள் உருவானதே படம் பார்க்கத்தான். டிவி சீரியல் எல்லாம் படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்துவிடாது. அது படத்துக்கு சமமாகுமா?

சூப்பர் ஹிட்டான படத்தைக்கூட உருப்படாத படம் என்று ஒருவன் சொல்வான் .ஆளாளுக்கு ரசனை வேறுபடும் தானே? முடிந்த அளவுக்கு தரமான படங்களை இப்படி வெளியிடுவோம். படம் பார்ப்பவர் விகிதம் கூட வேண்டும். 5 ஆயிரம் பேர்  பார்ப்பது 50 ஆயிரமாக வேண்டும். அது 5 லட்சமாக வேண்டும்.  இப்படி படம் பார்ப்பவர் விகிதம்கூட வேண்டும்  100 ரூபாய்க்கு 120 வியாபாரம்  இருந்தால் கூடப்போதும்.

நான் சினிமாவில் பல துறைகளில் பணியாற்றியவன். என் படத்தை வைத்துதான் சோதனை முயற்சி செய்கிறேன். லாபம் நஷ்டம் என்றால் எங்களுக்கு. வெற்றி பெற்றால் மற்றவர்களுக்கு உதவும்” என்றார் குகன்.

நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

m9

‘மதுரை டூ தேனி – 2’ படத்தை ஒளிப்பதிவு செய்து கதை, திரைக்கதை, வசனம், எழுதி எஸ்.பி.எஸ்.குகன் இயக்குகிறார். பாடல்களை செல்வராஜா எழுத, சரவண கணேஷ் இசையமைக்கிறார். நடனத்தை தீனா- இருசன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஆர்.ஜி.ஆனந்த் செய்கிறார். டெரிக் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை கவனிக்கிறார். பாலு – ஜெய் கணேஷ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கின்றனர்.

போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ். ஜானகி சோணைமுத்து தயாரிக்கிறார். இணை தயாரிப்பு ஏ.வெங்கடேஷ்வரி, ஜி. ஜானகி, சத்யவாணி அனந்தகிருஷ்ணன்.

நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது.