மர்மமும் காதலும் கலந்த படம் ‘என்னோடு நீ இருந்தால்’!

சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படம் ‘என்னோடு நீ இருந்தால்’. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கிறார் மு.ரா.சத்யா.

கதாநாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். இவர்களுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி, ரோகிணி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக் பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணைத் தலைவர் பி.எல்.தேனப்பன், பொதுச்செயலாளர் டி.சிவா, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பேரரசு, இயக்குனர்கள் டி.பி.கஜேந்திரன், கஸ்தூரிராஜா, ரவிமரியா, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், படக்குழுவினரும் இவ்விழாவில் கலந்துகொண்டார்கள்.

e8

இப்படத்தின் இயக்குனர் மு.ரா.சத்யா கூறுகையில், “நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. படம் பார்த்துப் பார்த்து கற்றுக்கொண்டதும், கேள்வி ஞானம் மற்றும் சினிமா பற்றி நிறைய படித்ததையும் வைத்து இயக்குனராகி இருக்கிறேன். அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன் ஆன்மீகம் பற்றிய புத்தகம், போதை ஒழிப்பு புத்தகம், தன்னம்பிக்கை பற்றிய புத்தகங்களை எழுதி இருக்கிறேன்.

“என்னோடு நீ இருந்தால்’ படத்தின் கதை என்னவென்றால், இது ரொமான்டிக் திரில்லர் கதைக்களம். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நாயகன் கிஷோர்  (மு.ரா.சத்யா) கோடீஸ்வர பெண்ணான  பூஜாவை (மானசா நாயர்) காதலிக்கிறான். திடீரென்று  ஒருநாள் பூஜா  காணமல் போகிறாள். கிஷோர் அவளை தேடி அலைகிறான். இதற்கிடையே அவனைச் சுற்றி பல்வேறு திகைப்பூட்டும் திகில் நிறைந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களை விறுவிறுப்போடு, மென்மையான காதலை கலந்து சொல்லுகிறது ‘என்னோடு நீ இருந்தால்’.

படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் அமைந்துள்ளன. மேலும், படத்தில் வெறும் காதலை மட்டும் கூறாமல், இன்றைய காலகட்டத்தில் சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வையும் கொடுக்க உள்ளோம். படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க சென்னையிலேயே நடத்தியிருக்கிறோம்”என்றார் மு.ரா.சத்யா.

ஒளிப்பதிவு – நாக.சரவணன்

இசை – கே.கே

எடிட்டிங் – ராஜ்கீர்த்தி

கலை  – எஸ்.சுப்பிரமணி

நடனம் – கேசவன்

தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.ஆனந்த்

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி