மலேசிய விமான நிலையத்தில் நயன்தாராவுக்கு நடந்தது என்ன?

விக்ரம் – நயன்தாரா நடிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கிவரும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக மலேசியா சென்ற நடிகை நயன்தாரா, நாடு திரும்பும்போது, பாஸ்போர்ட் தொடர்பாக மலேசிய விமான நிலையத்தில் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியானது.

இது குறித்து ‘இருமுகன்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை:-

மலேசியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்குச் செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் பயணிப்பர். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது.

அம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப் பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், நயன்தாராவின் பாஸ்போட் நகல் அந்நாட்டு இணையதளங்களில் வெளியானது குறித்து, மலேசிய காவல்துறையில் புகார் ஒன்றை ‘இருமுகன்’ படக்குழுவினர் அளித்துள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.