பேட்ட – விமர்சனம்

படத்தின் பெயர் ‘பேட்ட’ என அறிவிக்கப்பட்டவுடன் ‘ராயப்பேட்டை’, ‘உளுந்தூர்பேட்டை’ போல் ‘பேட்ட’ என முடியும் ஏதோவொரு ஏரியா பற்றிய கதையாக இருக்கும் என்று அப்பாவித்தனமாக யூகித்துக்கொண்டவர்களுக்காகச் சொல்கிறோம்: ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் பெயர் தான் பேட்ட. மற்றபடி இந்த பெயருக்கும், கதைக்கும் பெரிய சம்பந்தம் ஏதும் இல்லை.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அமைச்சருக்கு பரிந்துரைக்கப்பட்டு, அந்த அமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஊட்டி தனியார் கல்லூரி ஒன்றின் நிர்வாகம் அக்கல்லூரியின் விடுதி வார்டனாக ரஜினிகாந்தை (பேட்ட) பணியில் சேர்த்துக்கொள்கிறது.

அக்கல்லூரியின் சீனியர் மாணவரான பாபி சிம்ஹா தன் சகாக்களுடன் சேர்ந்து, ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்து அடாவடியில் ஈடுபடுகிறார். தன் தந்தை ஆடுகளம் நரேனுடன் சேர்ந்து விடுதி உணவு கான்ட்ராக்ட் விடுவதிலும் குளறுபடி செய்கிறார். இதை தட்டிக்கேட்க இறங்கும் ரஜினிக்கும், பாபி சிம்ஹாவுக்கும் மோதல் வெடிக்கிறது.

இதற்கிடையே, அந்த கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் ஆஸ்திரேலிய மாணவர் ஒருவரை தீர்த்துக்கட்ட உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஒரு கும்பல் வருகிறது. இந்த இரு ரவுடி கும்பல்களையும் ரஜினி ஒரே நேரத்தில் கல்லூரி வளாகத்தில் எதிர்கொண்டு துவம்சம் செய்கிறார்.

ஒரு மாணவனை தேடிக்கொண்டு உ.பி.யில் இருந்து எதற்காக ஒரு கும்பல் வர வேண்டும்? அவர்கள் யார்? அவர்களுடன் ரஜினி ஏன் மோதுகிறார்? பாபிசிம்ஹா உடனான பிரச்சினை என்ன ஆனது? முடிவில் வெல்வது யார்? இதற்கெல்லாம் பதில் சொல்கிறது ‘பேட்ட’.

கல்லூரி மாணவர்களுக்கு இணையாக உற்சாகம், இளமை பொங்க சுறுசுறுப்பாக ஓடியாடி வருகிறார் ரஜினி. மாணவர்களின் ஒழுங்கீனங்களை சரிசெய்வது, அவ்வப்போது சிம்ரனுடன் ரொமான்ஸ் செய்வது, முனிஸ்காந்தை கலாய்ப்பது, வில்லன் வீட்டுக்கே சென்று அவரை கூலாக எதிர்கொள்வது என முதல் பாதியில் ஒவ்வொரு ஃபிரேமிலும் கவர்கிறார். கவர்ச்சியான ஸ்டைல், போகிற போக்கில் செய்யும் காமெடி, இளமையான உடல்மொழி என காட்சிக்கு காட்சி ‘மரண மாஸ்’ காட்டுகிறார். சமீபகாலமாக, ‘பழைய ரஜினியை ஃபீல் பண்ண முடியவில்லை’ என்று வருந்திய ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

ஆனால், இப்படி ஸ்கோர் செய்யும் ரஜினியையும், அவரைச் சுற்றிச் சுழலும் கதையையும் 2ஆம் பாதியில் இன்னும் மெருகேற்ற இயக்குநர் தவறிவிட்டார். ரஜினி – சசிகுமார் நட்பின் பின்னணியாக விரியும் 2ஆம் பாதி திரைக்கதை, அதில் வரும் குடும்ப சென்டிமென்ட் ஆகியவற்றில் புதுமை இல்லை. பழிவாங்கலுக்காக காட்டப்படும் காட்சிகள், போகிற போக்கிலேயே சொல்லப்படுகின்றன.

நவாஸுதீன் சித்திக்கி பெரிய வில்லன் என்பதை நியாயப்படுத்தும் காட்சிகளும் இல்லை. ‘பாட்ஷா 2’ வரணும். அல்லது பாட்ஷா மாதிரியே ஒரு படத்துல ரஜினி மீண்டும் நடிக்கணும்’ என்பது ரஜினி ரசிகர்களின் ஆசைதான். அதை மனதில் வைத்து ஒரு ரஜினி ரசிகனாக திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர். அதற்காக, ‘பாட்ஷா’வையே உல்டா செய்திருக்க வேண்டாம். தவிர, ‘பாட்ஷா’வின் பெரும் பலம், ரகுவரனும்கூட. இதில் பிரதான வில்லன் பல இடங்களில் பலவீனமாக காட்சியளிக்கிறார்.

மற்றபடி 1980களின் பாடல்களை வானொலி வழியே பரவவிடுவது, மணல்கொள்ளை பற்றி பேசும் இடங்கள், விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் பிரதிபலிக்கும் சஸ்பென்ஸ் உள்ளிட்ட இடங்களில் இயக்குநரின் தனித் திறமை வெளிப்படுகிறது. ‘நல்லா இல்லேன்னா கேள்வி கேக்கணும்; இல்ல நாமளே இறங்கி மாத்தணும்’ என்பது போன்ற வசனங்களில் ரஜினி ரசிகர்களின் அரசியல் ஏக்கங்களுக்கும் தீனி போடுகிறார் இயக்குநர்.

நாயகிகளாக வரும் சிம்ரன், த்ரிஷா இருவருக்கும் நடிப்பதற்கு பெரிதாக வேலையில்லை என்றாலும் கதையின் ஓட்டத்துக்கு துணை நிற்கிறார்கள். அதிலும் சிம்ரனின் நடனமும், இளமைத் தோற்றமும் பாராட்டும்படி இருக்கிறது. வில்லனின் மகனாக வரும் விஜய் சேதுபதி கச்சிதமான நடிப்பு.

இயக்குநர் மகேந்திரன், ஆடுகளம் நரேன், மேகா ஆகாஷ், முனிஸ்காந்த், குரு சோமசுந்தரம் எனப் பலரும் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

டார்ஜிலிங், டேராடூன் மலைப் பின்னணியாகட்டும், நெருக்கடியான உத்தரப்பிரதேச நகரத்தின் பரபரப்பாகட்டும்.. மிக நேர்த்தியாக, அழகாக படம் பிடித்திருக்கிறார், தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. பின்னணி இசையில் படத்தின் கதைக்கு பொருத்தமாகவும், பாடல் இசையில் ரசிகர்களை கொண்டாடவும் செய்திருக்கிறார் அனிருத். ‘எத்தன சந்தோஷம்’, ‘மரண மாஸ்’ ஆகிய இரு பாடல்களிலும் தெறிக்க விட்டிருக்கிறார். இளமை ததும்பும் ரஜினியை பழைய மாஸ் அவதாரத்தில் ரசிக்க வைத்ததில் இசைக்கும், ஒளிப்பதிவுக்கும் பெரும் பங்கு உண்டு.

‘பேட்ட’ – ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து!