“தமிழனுக்கு இப்போது அதிகம் தேவை – ரௌத்ரம்”: படவிழாவில் பாரதிராஜா பேச்சு!

பி.ஹரிஹரன், பி.உதயகுமார், பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரது தயாரிப்பில் உருவாகியுள்ள முழுநீள காமெடி திரைப்படம் ‘காசு மேலே காசு’. இதில் கதாநாயகனாக ஷாருக், இன்னொரு கதாநாயகனாக மயில்சாமி, கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, லொள்ளுசபா சாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கே.எஸ்.பழனி. இசை -பாண்டியன், ஒளிப்பதிவு – சுரேஷ்தேவன், பாடல்கள் – கருப்பையா.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள்  பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், பி.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0a1d

விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது:

ஒரு படத்தில் நாயகனாக நடிப்பது சுலபம். ஆனால் காமெடியனாக நடிப்பதற்கு நிறைய நகைச்சுவை உணர்வு வேண்டும். நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் மயில்சாமி அதைவிட இதயம் சுத்தமானவர். மக்களை மகிழ்விப்பதில் மன்னன்.

எனக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம்கூட இல்லை. ஆனால், இந்த படத்தின் அழைப்பிதழ் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த படத்தின் பாடல்களை பார்த்தேன். நிச்சயம் இந்த படம் வெற்றிப்படமாக அமையும்.

நம் நிலம் களவாடப்படுகிறது, மொழி களவாடப்படுகிறது, கொஞ்சம் விட்டால் இந்த இனமே களவாடப்படும். விழித்துக்கொள். டைனோசர் இனம் அழியக் காரணம் அதனிடம் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். தமிழனுக்கு ரௌத்ரம் இப்போது அதிகமாக தேவைப்படுகிறது.

நானும் ஆன்மீகவாதி தான். முருகன் என்பவன் ஆறுபடை வீடுகளை ஆண்ட சாதாரண மனிதன். பின்னாளில் நாம் தான் அவனை கடவுள் ஆக்கிட்டோம்.

இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என நீ யாராக வேண்டுமானாலும் இரு. ஆனால், ஆட்சிக்கு வந்துவிட்டால், ஆட்சியில் இருக்கும் ஐந்து வருடமும் நீ காமன் மேனாகத் தான் இருக்க வேண்டும். பிரதமர், முதல்வர் ஆகிய இரண்டு பேருமே காமன் மேனாகவே இருக்க வேண்டும்.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.