“எனக்கு எப்போதும் தேவை – வேலையும், திரும்பி வருவதற்காக வீட்டில் ஒருவரும்”: கமல் பேட்டி!

நடிகர் கமல்ஹாசனுக்கு நேற்று பிறந்தநாள். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனது பிறந்தநாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த பிறந்தநாள் குறித்து கமல் ஒரு பேட்டியில் கூறுகையில், “மாடிப்படியில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் ஓய்வில் உள்ளேன். பெரும்பாலான நேரங்களில் உறக்கத்திலும் மயக்கத்திலும் இருக்கிறேன். எனவே பிறந்தநாளைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது.

இதேநாளில் பிறந்தநாள் கொண்டாடும் என் சினிமாத்துறையைச் சாராத நண்பர்களுடன் எப்போதும் ஒன்றாக இருப்பேன். ஆனால் இந்த முறை அதற்கும் மறுப்பு தெரிவித்துவிட்டேன். வலி அதிகமாக உள்ளது.

வலிகள் எனக்குப் புதிது அல்ல. என் வாழ்க்கையில் அவற்றை எப்போதும் எதிர்கொண்டுள்ளேன். ஆனால், பிறந்தநாளன்று, உங்கள் ரசிகர்கள் உங்களைப் பார்க்க விரும்பும்போது அதற்கு மறுப்பு தெரிவிப்பது சங்கடமாகத்தான் உள்ளது” என்றார்.

“இதுதான் உங்களுடைய சோகமான பிறந்தநாளா?” என்ற கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், “இல்லை. 16-வது பிறந்தநாள் தான் எனக்கு மிகவும் கடினமானது. அப்போது எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இருந்தேன். எத்திசையில் செல்ல வேண்டும் என்று தெரியாது. எதற்காக வாழ்கிறேன் என்றும் தெரியாது. என் அப்பா என்னை அழைத்து கடுமையாக கண்டித்தார். ஓர் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டு கதறி அழுதேன். என் பிறந்தநாளன்று அழுதது அப்போதுதான்.

இதுபோல இருப்பது மிகவும் கடுப்படிக்கிறது. சீக்கிரம் களத்தில் இறங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஒரு படத்தை நான் முடிக்க வேண்டியுள்ளது. வேலைகள் உள்ளன. ஆனால் நான் வலியால் வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறேன். எனக்கு எப்போதும் தேவையாக இருப்பது – வேலையும், திரும்பி வருவதற்காக வீட்டில் ஒருவரும்” என்றார்.