“பா.ரஞ்சித் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவார்”: ரஜினி பேட்டி!

“கபாலி’ படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் மிகச் சிறந்த மனிதர். அவருக்கு இன்னும் பெரிய பெரிய உயரங்கள் காத்திருக்கின்றன” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கபாலி’ திரைப்படம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலாய் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

சுமார் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் இப்படம், கடந்த வார விடுமுறை நாட்களில் நல்ல வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பிரம்மாண்டமான வசூலால் படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘கபாலி’ படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் இதில் கலந்துகொண்டார்கள். ரஜினியும் தொலைபேசி வாயிலாக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘கபாலி’ வெற்றி அடையும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த அளவுக்கு வெற்றி அடையும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. இதற்கு என் குருநாதருக்கும், தமிழக மக்களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.

இயக்குனர் ரஞ்சித் மிகச் சிறந்த மனிதர். அவருக்கு இன்னும் பெரிய பெரிய உயரங்கள் காத்திருக்கின்றன.

தயாரிப்பாளர் தாணு ஒரு பிரமாண்டமான விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். எந்த விழாவும் வேண்டாம் என்று இதுவரை அவருடைய கைகளை நான் கட்டிப் போட்டிருந்தேன். இனிமேல் கட்டிப் போட மாட்டேன்.

இந்த வெற்றிக்கு காரணம் எல்லாமே படக்குழு தான்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.