பா.ரஞ்சித் ஒரு வரியில் சொன்ன ‘கபாலி’ படக்கதை”: சௌந்தர்யா தகவல்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்துக்கும், ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. சௌந்தர்யா தான் ‘கபாலி’ படத்தின் ஆரம்பகர்த்தா. இப்படத்தின் தொடக்கப் புள்ளி குறித்து சௌந்தர்யா ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் தயாரித்த ‘கோவா’ படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக ரஞ்சித் பணியாற்றினார். அப்போது இருந்தே எனக்கு ரஞ்சித்தைத் தெரியும். ரஞ்சித் இயக்கிய முதல் படமான ‘அட்டகத்தி’ படத்தை நான் தயாரிப்பதாக இருந்து, முடியாமல் போனது.

ஒரு நாள் அப்பா, ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படம் தனக்கு பிடித்திருப்பதாகக் கூறினார். உடனே அந்த விஷயம் என் மனதில் வேலை செய்ய ஆரம்பித்தது.

பின்னாளில் நான் ரஞ்சித்தை சந்தித்தபோது, “அப்பாவுக்காக ஒரு கதை பண்ணுகிறீர்களா?” என்று கேட்டேன். அவர் உறைந்து நின்றார்.

சில நாட்கள் கழித்து வந்து ஒரு வரி சொன்னார். அது – ‘மலேசியா டான்’. அது போதுமானதாக இருந்தது. இதை அப்பாவிடம் சொன்னேன். அப்பாவுக்கும் பிடித்திருந்தது. அதுதான் இன்றைய ‘கபாலி’.

இவ்வாறு சௌந்தர்யா கூறியுள்ளார்.