காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்

நடிப்பு: கவுசிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி, மேத்யூ வர்கீஸ், ஜெயா சுவாமிநாதன், சுவாமி நாதன், ஆர்ஜே விக்னேஷ்காந்த், அனிதா சம்பத் மற்றும் பலர்

இயக்கம்: ராகவ் மிர்தாத்

இசை: ஹரி எஸ்.ஆர்

ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்

தயாரிப்பு: ஸ்ரீ ஸ்டூடியோஸ், அறம் எண்டர்டெய்ன்மெண்ட்

பத்திரிகை தொடர்பு: நிகில்

சினிமாவில் காட்டப்படும் காதல் வாழ்க்கையை உண்மை என நம்பி மயங்கிக் கிடக்கும் ஓர் இளைஞன் நிஜ வாழ்க்கைக்கு எப்படி வருகிறான் என்பதைச் சொல்லும் படம் இது.

நாயகன் கவுசிக் ராம் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது குடும்பம் உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பம். வீட்டிற்கு செல்லப்பிள்ளையான கவுசிக், திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். காதல் என்பதே திரைப்படங்களில் காட்டப்படுவது போன்றது தான் என்றும், அது மாதிரியான ஒரு காதல் வாழ்க்கையைத் தான் நாம் வாழ வேண்டும் என்றும் நினைக்கிறார்.

ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அது சரியில்லாமல் காதலில் முறிவு ஏற்படுகிறது. அப்போது கவுசிக் அப்பாவின் நெருங்கிய நண்பரின் மகள் அஞ்சலி நாயர் தன் குடும்பத்தோடு கவுசிக் வீட்டிற்கு வருகிறார்.

கவுச்சிக்கை பார்த்ததும் அஞ்சலி காதல் வயப்படுகிறார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவுசிக்கிடம் நேரடியாக அஞ்சலி கேட்க இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஒரு கட்டத்தில் கவுசிக்கின் பழைய வாழ்க்கை அஞ்சலிக்கு தெரிய வருகிறது.

இதனால் விரக்தியடைந்த அஞ்சலி, கவுசிக்கை பிரிய நினைக்கிறார். இறுதியில் கவுசிக்கின் வாழ்க்கை என்ன ஆனது? சினிமாக் காதலை முன்மாதிரியாக வைத்து நிஜ வாழ்க்கையில் அவர் செய்த காதல் கைக்கூடியதா, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கவுசிக் அறிமுக நடிகர் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பெண்களை சுற்றித் திரியும் ஒரு இளைஞன் என்னென்ன செய்வானோ அதை ரசனையுடன் கொடுத்திருக்கிறார்.

நாயகி அஞ்சலி நாயர் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இரண்டாவது நாயகி ஹீரோஷினி சில காட்சிகளில் வந்தாலும் உண்மையான காதல் என்ன என்பதை தன் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் சரியாகப் பயன்படுத்தி அருமையான காதல் படத்தைக் கொடுத்திருக்கிறார். உண்மையில் காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த படத்தில் அழகாக சித்தரித்திருக்கிறார்.

ஹரி எஸ் ஆர் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

‘காலங்களில் அவள் வசந்தம்’ – காதலர்கள் மட்டுமல்ல, தம்பதியரும் கண்டு களிக்கலாம்!