‘காலா’ படத்துக்கு வசனம் எழுதிய தாராவி இளைஞர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், த்னுஷ் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காலா’ திரைப்படம்  பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது. குறிப்பாக, படத்தின் வசனங்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி விமர்சகர்கள், சமூக வலைத்தளப் பதிவர்கள் மத்தியிலும் விவாதத்தை உண்டுபண்ணும் அளவிற்கு இப்படத்தின் வசனங்கள் பெரும் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கின்றன.

‘காலா’ படம் தாராவி நிலப்பரப்பை பற்றிய படம்  என்பதால், இயக்குனர் ரஞ்சித் தானே நேரடியாக தாராவிக்குச் சென்று ஆய்வு செய்த பிறகே திரைக்கதை எழுத ஆரம்பித்திருக்கிறார். மேலும், தாராவியில் வாழ்ந்த ஒருவர் இந்த படத்திற்கு வசனம் எழுதினால் சரியாக இருக்கும் என்று ரஞ்சித் விரும்பியிருக்கிறார். அப்படி தாராவியில் பிறந்து வளர்ந்த மகிழ்நனுக்கு  இந்த படத்தில் வசனம் எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ரஞ்சித்.

அறிமுக வசனகர்த்தா என்றில்லாமல் முழு சுதந்திரம் கொடுத்து எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறார். மகிழ்நனுடன் இணைந்து எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும், இயக்குனர் ரஞ்சித்தும் வசனம் எழுதியிருக்கிறார்கள்.

பல மொழி கலந்து வந்திருக்கும் வசனம் சலிப்பூட்டும்படியாக இல்லாமல், தாராவி நெல்லைத் தமிழ் வாசனையோடு வந்திருப்பதற்கு மகிழ்நனும் ஒரு காரணம். மண்ணைப் பற்றி பேசுவது மட்டுமில்லாமல், மண்ணிலிருந்தே படைப்பாளிகளை உலகுக்கு அடையாளப்படுத்துபவர்  இயக்குனர் பா.ரஞ்சித் என்பதற்கு, மகிழ்நன் அறிமுகம் ஓர் உதாரணம்.