“17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மாதவன் இதுவரை வீடு திரும்பவில்லை!”

கடந்த 17ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி, தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ஜெ.தீபா கணவர் மாதவன், இதுவரை வீடு திரும்பவில்லை. அவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

குற்றவாளி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 17ஆம் தேதி இரவு திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், தீபா பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், தீபா தனித்து செயல்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும், தொண்டர்கள் விருப்பப்படி தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த அவர், தீபா போட்டியிடும் ஆர்.கே.நகரில் தானும் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக கூறினார்.

இதன்பின்னர் 18ஆம் தேதி (நேற்று முன்தினம்) சென்னை சிஐடி காலனியில் தனது ஆதரவாளர்களுடன் மாதவன் தனியாக ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்டமாக மதுரவாயலில் உள்ள ஒரு மண்டபத்தில் 19ஆம் தேதி (நேற்று) கூட்டத்தை கூட்டி புதிய கட்சி குறித்த அறிவிப்பை மாதவன் வெளியிடுவதாக இருந்தார். ஆனால், அங்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவேற்காட்டில் நேற்று தனது ஆதரவாளர்களிடம் மாதவன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “புதிய கட்சியை ஓரிரு நாட்களில் தொடங்குவேன். தீபாவை முதலமைச்சராக்குவதே அந்த கட்சியின் நோக்கம். அதற்காக பணிகளை இனி வரும் நாட்களில் மேற்கொள்வோம்” என திடீர் பல்டி அடித்து முன்னுக்குப் பின் முரணாக கூறினார்.

கடந்த 17ஆம் தேதி தனித்து செயல்படுவேன் என்று கூறிய மாதவன், இரண்டே நாட்களில் திடீரென தனது கருத்தை மாற்றிக்கொண்டதால் மாதவனின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து மாதவனின் ஆதரவாளர்கள் சிலர் கூறும்போது, “தீபாவும், அவரது கணவரும் உறுதியான நிலைப்பாடு எடுப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இருவருமே முன்னுக்குப் பின் முரணாகவும், முடிவுகளை திடீர் திடீரென மாற்றியும் வருவதால் ஆரம்பம் முதல் உடனிருக்கும் தொண்டர்களாகிய எங்களை ஏமாற்றி வருகின்றனர் என்றே தோன்றுகிறது. மாதவன் தனியே கட்சியை நடத்துவது சிரமம் என உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார் என நினைக்கிறோம். ஏற்கெனவே பலர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிட்டனர். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் தீபா பேரவை காலியாகிவிடும்” என்றனர்

தீபா பேரவை நிர்வாகி ஒருவர் கூறும்போது, “கடந்த 17ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய மாதவன் இதுவரை வீடு திரும்பவில்லை. வெளியே ஒரு தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். மாதவன் பிரிந்து சென்றதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆர்.கே.நகரில் தீபா போட்டியிடுவது உறுதி. விரைவில் தீபா தனது பிரச்சாரத்தை தொடங்குவார்” என்றார்.

பணவெறி, பதவிவெறி பிடித்து பேயாய் அலையும் தீபா, அவரது கணவர் மாதவன், தீபாவின் உதவியாளர், இந்த உதவியாளரின் மனைவி ஆகிய நால்வர் கும்பலை அ.தி.மு.க.வினர் காறித்துப்பி செல்லாக் காசாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே தெரிகிறது.