‘இது நம்ம ஆளு’ – வெளியே! ‘இறைவி’ – உள்ளே!!

தமிழ் திரையுலகின் ‘புதிய ட்ரெண்ட் செட்டர்’ என கொண்டாடப்படும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, ராதாரவி, அஞ்சலி, கமாலினி முகர்ஜி  நடித்துள்ள ‘இறைவி’ படம் நாளை (ஜூன் 3ஆம் தேதி) உலகெங்கும் வெளியாகிறது.

ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய மூன்று பிரபல நிறுவனங்கள் இணைந்து  ‘இறைவி’ படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளன.

இப்ப்டத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை, கடும் போட்டிக்கு இடையே கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முந்தைய படங்களின் மற்றும் விஜய்சேதுபதி நடித்த முந்தைய படங்களின் விலையைவிட பல மடங்கு  அதிக தொகை கொடுத்து ‘இறைவி’ உரிமையை கே.ஆர்.பிலிம்ஸ் பெற்றுள்ளது..

சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தை கே.ஆர்.பிலிம்ஸ்தான் தமிழகம் முழுக்க விநியோகம் செய்தது. கே.ஆர்.பிலிம்ஸ் வெளியிட்ட இந்த முதல் படம் மிகப் பெரிய லாபத்தைக் கொடுத்தது. இதை தொடர்ந்து ‘காக்கா முட்டை’ பட இயக்குநர் மணிகண்டன் இயக்கிய ‘குற்றமே தண்டனை’ படத்தை வாங்கியுள்ளது கே.ஆர்.பிலிம்ஸ். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்துவரும் கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ யை  இப்போது வெளியிடுகிறது.

படவிநியோகத்தில்  கே.ஆர். பிலிம்ஸ் சரவணனின் அணுகுமுறை வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதால்தான் அவருடன் வர்த்தகம் செய்ததாக சொல்கிறார்கள் ‘இறைவி’ தயாரிப்பாளர்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் 450க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘இறைவி’ வெளியாகிறது.

கடந்த வாரம் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால், அது பல திரையரங்குகளில் இருந்து சில நாட்களிலேயே தூக்கப்பட்டது. அந்த திரையரங்குகளில் எல்லாம் ‘இறைவி’ திரையிடப்படுகிறது.

‘இது நம்ம ஆளு’ – வெளியே!

‘இறைவி’ – உள்ளே!