“இனி அப்பா இல்லை…” – அழகியசிங்கர்

அப்பா எப்போதும் போல் இல்லை. கண்ணை முழிக்காமல் இருந்தார். கன்னத்தில் லேசாக தட்டி தட்டி காப்பி கொடுத்தேன். குடிக்க விருப்பமில்லாமல் இருந்தார். ஆனால் குடித்தார். கொஞ்ச நேரம் கழித்து கஞ்சி கொடுத்தேன். திரும்பவும் அப்பா கண்ணை முழிக்கவில்லை. லேசாகத் தட்டினேன். கையை உயரத் தூக்கினேன். லேசாக முணுமுணுத்தார். பின் கஞ்சியைக் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவரை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

புத்தகக் காட்சி ஒட்டி ஒரு விவாதம் எனக்கும் மனைவிக்கும் நடந்தது. “அப்பா சரியாயில்லை. நீங்கள் இரண்டு மணிநேரம் தான் அங்கு இருக்க வேண்டும்” என்று. நானும் சரி சரி என்றேன். ஆனால் மனதிற்குள் அப்பா புத்தகக் காட்சி வரை இருப்பார் என்று தான் நினைத்தேன். அவர் படுத்தப் படுக்கையாக ஒரு வருடமாக இருந்து கொண்டிருந்தார்.

இரவு நேரங்களில் அவர் சத்தம் போடுவார். நான் ஓடிப்போய் அவர் கையைப் பிடித்துக்கொள்வேன். ‘பயமாய் இருக்கிறதடா’ என்பார். நான் “பயப்படாதே” என்பேன். ஆனால் நான்தான் உண்மையில் பயந்தவன். என் அப்பா ஒரு தைரியமான மனிதர். பாலகுமாரன் என்ற எழுத்தாளர் அவர் அம்மாவிற்கு ஒரு பத்திரிகையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் நானும் அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுத நினைத்தேன். ஆனால் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.

0a1eஎன் அப்பா நல்ல மாதிரி. அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. அவருடைய ஆசைகள் குறைவானவை. மிகவும் சாதாரண விஷயங்களில் திருப்தி அடைந்துவிடுவார். அப்பாவிடம் கேட்டேன் ஒருநாள்: “ரமண மகரிஷியைப் பார்த்திருக்கிறாயா?” என்று. “இல்லை” என்று சொன்னார். அவருக்கு அதெல்லாம் தோன்றவில்லை. அவர் ரொம்ப படித்தவர் இல்லை. ஆனால் அவர் ஒரு முறை “க.நா.சு நாவல்கள் போரடிக்கும். படிக்க முடியாது” என்று சொன்னது ஆச்சரியம். ஞானக்கூத்தனின் பென்சில் படங்கள் புத்தகத்தைக் கொண்டு வந்தபோது அதில் உள்ள கவிதைகளைப் படித்து அவரிடமே ரசித்துச் சொல்வார்.

நான் தடிதடியாய் புத்தகம் வைத்திருப்பேன். எடுத்துப் படிக்க மனசு வராது. அப்பா எடுத்துப் படித்து விடுவார். ஒரு முறை அசோகமித்திரன் கதைகள் எல்லாவற்றையும் அவர் படித்து விட்டார். எனக்கு ஆச்சரியம். “எதாவது ஒரு கதை சொல்லுப்பா” என்றால் சொல்ல மாட்டார். தி.ஜானகிராமன் கதைகளையும படிதது விட்டார். நான் எழுதும் என் படைப்புகளை அப்பாவிடம் காட்டுவேன். ஒரு முறை அப்பாவைப் பற்றியே ஒரு கதை எழுதினேன். அவருக்குப் பிடிக்கவில்லை. “என்ன எழுதியிருக்கே” என்று திட்டவும் செய்தார். அன்றிலிருந்து நான் எதாவது எழுதினால் தானாகவே விரும்பிப் படிக்க மாட்டார். நான் படிக்கச் சொல்லி கெஞ்சணும்.

நான் முட்டாள்தனமாய் பதவி உயர்வுப் பெற்று, சென்னையைவிட்டுப் போனவுடன், அப்பாவிற்கு வருத்தமாகி விட்டது. அவர் எங்கள் வங்கி தலைவருக்கு தமிழில் நாலைந்து பக்கங்கள் தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொண்டார். யாராவது அப்பா தன் பையன் மாற்றல் பெற்று திரும்பவும் சென்னைக்கு வரவேண்டுமென்று கெஞ்சி கடிதம் எழுதுவார்களா? என் அப்பா அதைச் செய்தார். ‘என்னடா இது, இப்படி தவிக்க வைத்துவிட்டு வந்து விட்டேனே’ என்று எனக்குத் தோன்றும்.

ரிட்டையர்டு ஆவதற்கு முன் இரண்டு வருடம் நான் சென்னைக்கு வந்து விட்டேன். அப்பவும் அப்பா விடவில்லை. மேற்கு மாம்பலத்திலேயே ஒரு கிளை அலுவலகத்தில் என்னை மாற்றும்படி கடிதம் எழுதுவார். எனக்கு இவர் இது மாதிரி செய்கிறாரே என்று தெரியாது. அப்பாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்.

2014ஆம் ஆண்டு நான் ரிட்டையர்டு ஆகி வந்தபிறகு அப்பாவுடன் முழுக்க முழுக்க இருந்தேன். “நானும் வீட்டிலே இருக்கேன்..நீங்களும் இருக்கீங்க” என்பேன். அப்பா முதல் அறையிலிருந்து கடைசி அறை வரை அடிக்கடி சென்று கொண்டிருப்பார். நான் கிண்டல் செய்வேன். “இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் போகிறியா, அப்பா” என்று. என் எழுத்தாள நண்பர்கள் பலரிடம் அவர் ஹோமியாபதி மருந்துகளைப் பற்றி சொல்லி போர் அடிப்பார். ஒரு முறை புத்தக ஸ்டாலிற்கு வந்திருந்து என் ஸ்டாலைப் பார்த்துக் கொண்டிருந்தார்

போன ஆண்டு ஜூன் மாதம் பிறகு அவரால் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளவே முடியவில்லை. ஆட்கள் வைத்து அவரைப் பார்த்துக்கொண்டோம். அவருக்கு தன் இயலாமை குறித்து வருத்தம். அப்பா ராத்திரி முழுவதும் தூங்காமல் கத்திக்கொண்டே இருப்பார். அவர் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவர் கைகளைப் பற்றிக்கொள்வேன். என் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொள்வார். அப்பா படுத்திருந்த அறைக்குப் பக்கத்தில் நான் படுத்துக்கொள்வேன்.

நேற்று (05.01.2017) அப்பா இறந்து விட்டார். இரவு 9 மணிக்கு. என்னால் இனிமேல் அவர் படுத்திருந்த அறைக்குப் பக்கத்தில் படுக்க முடியாது. .

# # #

அப்பாவை நேற்று எரியூட்டி கடற்கரையில் கரைத்தாகிவிட்டது. ஆனால் வீட்டிற்குள் நுழைந்தால், அவர் படுத்திருந்த அறையில் அவர் இன்னும் படுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் என் பெயரைக் கூப்பிட்டு சத்தம் போடுவது இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இரவு நேரத்தில் அவர் படுத்திருந்த அறையையும், அந்த அறைக்குப் பக்கத்தில் நான் படுத்திருந்த இடத்தையும் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அவர் நினைவு என்னைத் துன்பப்படுத்தாமல் இல்லை.

எல்லா உறவினர்களும் வந்துவிட்டுப் போய்விட்டார்கள். முதலில் நாங்கள் நால்வர் இருந்தோம். பின் மூவர் இருந்தோம். இப்போது இருவர் இருக்கிறோம்.

அப்பா இருந்தபோது வீட்டைவிட்டு வெளி இடங்களில் என்னால் போக முடியவில்லை என்று நினைத்தேன். சுதந்திரம் இல்லை என்று நினைத்தேன். இப்போது சுதந்திரம் இருக்கிறது. ஆனால் நினைவுச் சுழலிலிருந்து மீண்டு வெளியே செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. போக வேண்டிய அவசியமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.எங்கே போய் என்ன செய்வது?

அழகியசிங்கர்