டிவி விவாதத்தில் அநாகரிகமாக மோதிக்கொண்ட சீமான், அருணன் – வீடியோ

தந்தி டிவியில் இன்று (செவ்வாய்கிழமை) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு – வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன் (மார்க்சிஸ்ட் கட்சி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன் (திமுக), சீமான் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், அ.தி.மு.க.வை அகற்றுவதே முக்கியமான வேலை என்று சொல்லும் மக்கள்நலக் கூட்டணியின் முடிவை சொன்னார் பேரா. அருணன். அதற்கு சீமான் “இதெல்லாம் ஒரு வேலையா? அவர்களோடு தானே மாறி மாறி கூட்டணியில் இருந்தீர்கள்? பகுத்தறிவு பாதையில் போன பயணம் சினிமா பக்கம் திரும்புது என்று பாடிய கம்யூனிஸ்டுகள், இப்போது ஒரு சினிமாக்காரர் பின்னால் போகிறார்கள்” என விமர்சனம் வைத்தார்.

அதற்கு அருணனும் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.

பிறகு, “மக்கள்நலக் கூட்டணியைவிட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று சீமான் பேசினார். அதற்கு அருணன் விளக்கம் கொடுத்தார்.

இடைமறித்த சீமான், “நீங்கள்லாம் கம்யூனிஸ்டா, கம்யூனிஸ்டா?” என்று திரும்பத் திரும்ப கேட்டார். “உங்களுக்கு கொள்கை இல்லை. தத்துவம் இல்லை, நோக்கம் இல்லை” என்றும் பேசினார்.

கோபமடைந்த அருணன், “பெரியாரைப் பற்றி தவறாகப் பேசிய நீங்கள், கொள்கை கூட்டணி குறித்து பேசக்கூடாது” என்று சொல்லவே, இடைமறிக்க முற்பட்டு, முடியாமல் போன சீமான், “ஏய்…” என்றும், “லூசுத்தனமா பேசுறே…” என்றும் அநாகரிகமான முறையில் ஒருமையில் பேசினார்.

அருணனும் பதிலுக்கு “வாடா… போடா…’” என்று பேசிவிட்டார்.

இவற்றையெல்லாம் ரசித்துப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார் பாண்டே.

வீடியோ இணைப்பு இங்கே…

https://youtu.be/0-4-X6ouy2U