ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி மகன் இசையமைத்த பாடல் “கோல் போடு”!

விளையாட்டுக்கும், இசைக்கும் சம்பந்தம் இருக்குமா? என யோசித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு, ஏ.ஆர்.ரஹ்மானுடைய  சகோதரியின் மகன் ஏ.எச்.காஸிப் இசையமைப்பில் உருவாகி வெளிவந்துள்ள  ‘கோல் போடு’ என்ற பாடல் இசைக்கும், விளையாட்டுக்கும் உள்ள உறவை தெள்ளத் தெளிவாக  விளக்குகிறது.

“இசைக்கும், விளையாட்டுத் துறைக்கும் மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்தே உறவு நீடித்து வருகிறது. பாரம்பரியம் மிக்க நமது சென்னை மாநகர் மக்களுக்கும், நம்மோடு வாழ்ந்த கால்பந்து  விளையாட்டுக்கும் காலத்தையும்   தாண்டிய உறவு இருந்துக்கொண்டே இருக்கிறது.  இதை சுட்டிக்காட்டி இப்பொழுது “கோல் போடு’”என்ற பாடலை பதிவு செய்திருக்கிறோம். ஐபிஎல் போலவே சென்னையில் கால்பந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் ரோஹித் ரமேஷின்  சென்னை சிட்டி கால்பந்து  அணிக்காக உருவாக்கிய பாடல் இது. சென்னை மக்களுக்கு கால்பந்து மேல் உள்ள பிரியத்தை அடையாளம் காட்டும்  பாடலாக இருக்கும் ‘கோல் போடு’.

பிரபல ஹிந்தி பாடகரும் இசையமைப்பாளருமான விஷால் தட்லாணி இந்தப் பாடலை பாடியிருக்கிறார். மோகன்ராஜ் பாடல் இயற்றியுள்ளார். லண்டன் பிபிசி நடத்தும்  அஷாந்தி ஒம்காரின் ஷோவில் இந்த  வாரத்துக்கான பாடலாக ‘கோல்  போடு’  தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகருக்கும் , கால்பந்துக்கும் உள்ள காதலை ஒரு வீடியோ ஆக வெளியிடுகிறோம். இதை இயக்கி இருப்பவர் இளம் இயக்குனர் அஷ்வின் ரவீந்தரன். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில், ஸ்ரீதரன். ஜி.கே படத்தொகுப்பில், சுரேஷ் சத்யா நடனம் அமைக்க, பிரபல ஆடை அலங்கார நிபுணர் சத்யா உடை அலங்காரம் செய்கிறார்” என்கிறார் எ.எச்.காஸிப்.