கவிஞர் பிரான்சிஸ் கிருபா இயற்கை எய்தினார்

கவிஞரும், நாவலாசிரியரும், ஆவணப்பட இயக்குனருமான பிரான்சிஸ் கிருபா நேற்று (16-09-2021) இயற்கை எய்தினார்.

பிரான்சிஸ் கிருபா திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டம் மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். சினிமாவின் மீது பெரும் விருப்பம் இருந்ததாலும், படிப்பில் பெரிய ஆர்வமில்லாததாலும்  பிளஸ்டூ முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டார்.

தொடக்கத்தில் சினிமாவுக்கான முயற்சிகளில் இருந்தவர், சோர்வுற்ற தருணங்களில் போதைக்கு மாறினார். மொழியில் விளையாடி நுட்பமான விவரணைகளில் மெருகூட்டியதால் சுசீந்திரன் போன்ற இயக்குநர்கள் அவரைப் பயன்படுத்த எத்தனிக்கும்போது கிருபா தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்.

‘கன்னி’ நாவலுக்குப் பிறகு அவர் சில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத வாய்ப்புப்பெற்றார். அதுவும் பாதியளவில் நின்றுவிட்டது. தொடர்ந்து அவரது பிரான்சிஸ் கிருபா மொத்தக் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்தது. கவிஞர் தேவதேவனின் கவிதைகள் குறித்து மருதம் என்ற பெயரில் ஒரு தீர்க்கமான ஆவணப்படம் எடுத்தார். அதனால் அவரால் நல்ல திரைப்படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது.

கடைசியாக அவர் எழுதிய ‘ஏறக்குறைய இறைவன்’ என்ற நாவல் இறுதி நிலையை எட்டியிருந்தது. அதேபோல் ‘நட்சத்திர பிச்சைக்காரன்’ என்ற கவிதைத்தொகுப்பும் வெளியிடத் தயார் நிலையில் இருக்கிறது.

அவரது முதல் கவிதைத் தொகுதி ‘மெசியாவின் காயங்கள்’. ‘வலியோடு முறியும் மின்னல்’, ‘நிழலன்றி ஏதுமற்றவன்’, ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ போன்றவையும் அவர் எழுதி வெளிவந்த தொகுப்புகள். சுந்தர ராமசாமி விருது, மீரா விருது, சுஜாதா விருது, விகடன் விருது போன்ற அங்கீகாரங்களை படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.

இதற்கிடையே, 2019ஆம் ஆண்டு சாலையோரவாசி ஒருவரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கோயம்பேடு போலீசாரால் பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டார். அவரது நல்மனம் பற்றி நன்கு அறிந்த இலக்கியவாதிகளும், ஊடகவியலாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு உறுதுணையாக இருந்தனர். அந்த சாலையோரவாசி வலிப்பு நோய் காரணமாக கீழே விழுந்து அடிபட்டு துடித்துக்கொண்டிருந்ததால் அவரைக் கண்டு பதறிய் பிரான்சிஸ் கிருபா தன் மடியில் வைத்து அவரை இயல்புநிலைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கிறார் என்பதை சிசிடிவி கேமரா மூலம் தெரிந்துகொண்ட போலீசார் அவரை விடுதலை செய்துவிட்டனர்.

இறுதியில் நோயின்பிடியில் சிக்கி பொறுக்க முடியாமல் நொறுங்கினார். அவரது படைப்புகள் மல்லிகைக் கிழமைகள் என்ற பெயரில் தொடராக வெளிவந்திருக்கின்றன. மலர் மாலைகளும் அழுகைக்குரல்களும் ஆறுதல் அஞ்சலியும் கூடி இன்று அவரது உடலடக்கம் சொந்த ஊரான பத்தினிப்பாறையில் நடைபெறுகிறது.