”ஆரியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களா, சொல்லுங்கள்! நாம் வேர்களுக்கு செல்ல வேண்டும்!” – சித்தராமையா

கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்புக்கான திருத்தப்பட்ட பாடத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் உரையின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள கல்வியாளர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்வரும் கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவருமான சித்தராமையா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, “இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ன பூர்வீக இந்தியர்களா? நாங்கள் சில விஷயங்கள் குறித்துப் பேச விரும்பாததால் அமைதியாக இருந்தோம். ஆரியர்கள் இந்த நாட்டை (இந்தியாவை) சேர்ந்தவர்களா? சொல்லுங்கள்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்ன திராவிடர்களா? இந்த நேரத்தில் நாம் அனைவரும் வேர்களுக்குச் செல்ல வேண்டும். 600 ஆண்டுகால முகலாய ஆட்சிக்கு யார் பொறுப்பு? நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்கள் எப்படி வந்திருப்பார்கள். அவர்களுக்கு யார் இடம் கொடுத்தார்கள்? 200 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சிக்கு யார் காரணம்?

கர்நாடகாவில் உள்ள குழந்தைகள் பாடப்புத்தகங்களில் என்ன படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு ரோஹித் சக்ரதீர்த்தா என்ற ஒற்றை நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாம் எங்கே செல்கிறோம்? பகத்சிங்கின் பாடம் நீக்கப்பட்டு, அதற்குப்பதிலாக ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவாரின் உரை சேர்க்கப்பட்டுள்ளது. பகத்சிங்கை விடத் தேசபக்தி நிறைந்த நபரைச் சொல்ல முடியுமா? பாஜக வரலாற்றைத் திரிக்க முயல்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, சரியான வரலாறு என்ன என்பதை அறிவதே கடினமாகிவிட்டது” என்றார்.