ரயில் கொள்ளை – போலீஸ் விசாரணை: “ஆடு மேய்ப்பவர்கள் எச்சரிக்கையா இருங்கப்பா!”

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் கடந்த 8ஆம் தேதி அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். அங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

5-வது பெட்டியில் ரூ.10, ரூ.20 நோட்டுகள் இருந்ததால் அவற்றை கொள்ளையர்கள் அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டனர். கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.5 கோடி வரை இருக்கும் என ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ரயில் கொள்ளை வழக்கு விசாரணை, தற்போது தமிழக ரயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது மீண்டும் தமிழக சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா சேவியர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு:-

“500 ரூபாய் கிழிந்த நோட்டு ஒன்றை மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதுக்கும் ஆப்பு வச்சுட்டானுக. இப்ப கொண்டு போனா, ராம்குமார் ரேஞ்சுக்கு நம்மள ஆக்கிருவானுக.

நாசமாப் போங்கடா.

ஆள் யாரும் கிடைக்காவிட்டால் சிக்கல் தான். சேலம் ஏரியாவுல ஆடு மேய்ப்பவர்கள் எச்சரிக்கையா இருங்கப்பா.

மாடு மேய்ப்பவர்களுக்கு பிரச்சனை வராது. ஏன்னா, அவுங்க தான அரசே நடத்துறாங்க.”