“இவர் இன்னொரு மணிரத்னம்! இன்னொரு ஷங்கர்!”: பாராட்டு மழையில் 21 வயது இயக்குனர்!

தமிழ் திரையுலகில் இன்று பரபரப்பாக பேசப்படும் இயக்குனர் – கார்த்திக் நரேன். 21 வயது இளைஞராய் இவர் இயக்கியிருக்கும் முதல் முழுநீள திரைப்படமான ‘துருவங்கள் பதினாறு’, வருகிற 30ஆம் தேதி தான் திரைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்பாகவே இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு பெற்ற தமிழ் திரையுலகினர், படத்தை வானளாவ புகழ்வது மட்டுமின்றி, இதை இயக்கியுள்ள கார்த்திக் நரேனை “இவர் இன்னொரு மணிரத்னம்; இன்னொரு ஷங்கர்” என்று மனம்விட்டு பாராட்டுகிறார்கள்.

“என் சினிமா கேரியரில் இப்படியொரு படத்தை நான் பார்த்ததில்லை” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இவரை கட்டிப்பிடித்து பாராட்டியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

கோவையை சேர்ந்தவர் கார்த்திக் நரேன். திரைத்துறை பின்புலம் எதுவும் இல்லாமல், அங்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த இவருக்கு, திடீரென சினிமா ஆசை வந்தது. படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னை வந்து குறும்படங்கள் இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய ‘விழியின் சுவடுகள்’, ‘நிறங்கள் மூன்று’, ‘ஊமைக்குரல்’, ‘பிரதி’ ஆகிய 4 குறும்படங்களுமே பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன. அதன்பின் சித்தார்த் நடித்த ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

‘துருவங்கள் பதினாறு’ கதையை தயார் செய்துகொண்டு, இவர் தயாரிப்பாளரை தேடி அலைந்தார். இக்கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள், இவரது 21 வயது மீது நம்பிக்கை வைக்க தயங்கினார்கள். இதனால், தனது அப்பாவையே தயாரிப்பாளராக ஆக்கி, 28 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டார். எனினும், தொழில்நுட்ப ரீதியில் தரமான படமாக இருக்க வேண்டும் என்பதற்காக போஸ்ட் புரொடக்ஷனுக்கு 6 மாதங்கள் எடுத்துக்கொண்டார்.

ஆபாச காமெடி, ஆவேச பஞ்ச் வசனங்கள், பாடல்கள், கதாநாயகி, காதல்… இப்படி வழக்கமான எதுவுமே இல்லாமல், பரபரப்பான கதையையும், விறுவிறுப்பான காட்சிகளையும் வைத்து இந்த சைகலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் படத்தை எடுத்திருக்கிறார் கார்த்திக் நரேன். முக்கிய கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்திருக்கிறார். அவருடன் பல புதுமுகங்கள் பங்கேற்றுள்ளனர்.

 ‘துருவங்கள் பதினாறு’ படம் பற்றி இயக்குனர் கார்த்திக் நரேன் கூறுகையில், “இந்த படத்தில் 16 பேர் கதாபாத்திரங்களாக வருகிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக உணர வைப்பார்கள். அது மட்டுமல்ல, படத்தின் கதை 16 மணி நேரத்தில் நடக்கிறது. எனவேதான் இப்பெயரை வைத்தோம்.

ரகுமான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். அவர் தன் பணியில் நடந்த ஒரு சம்பவத்தால் ஊனமுற்றவராகி விடுகிறார். அதனால் பணியைவிட்டுப் போய்விடுகிறார். ஐந்தாண்டுகள் ஓடி விடுகின்றன. அதற்குப்பிறகு ஒரு பொறி தட்டுகிறது. அன்று, தான் செய்த புலனாய்வு விசாரணையை மறுபடியும் செய்தால் என்ன என்று அவருக்குத் தோன்றவே காட்சிகள் விரிகின்றன. அவைதான் 16 மணி நேரம் படத்தில் நடப்பவை.

ரகுமான் பெரிய நடிகர். நடிப்பில் அவர் 32 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். அவரை 21 வயதே ஆன புதியவன் நான் எப்படி இயக்குவது என்று எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஆனால் அவர் அதை போக்கிவிட்டார். சகஜமாக்கிப் பழகினார். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார் டாமினேட் செய்யவே இல்லை. நடிப்பால் பல காட்சிகளுக்குச் செழுமை சேர்த்திருக்கிறார். அவரிடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொண்டேன்.

படத்தின் கதை கோவையில் நடந்தாலும் கோவை, சென்னை, ஊட்டி என பல ஊர்களிலும் மொத்தம் 28 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது” என்கிறார்.

 படத்தை பார்த்த அனைவருமே பாராட்டுவதால், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார் கார்த்திக் நரேன். ‘துருவங்கள் பதினாறு’ வேற லெவல் படமாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். இப்படத்தை ட்ரீம் ஃபேக்டரி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

ஒளிப்பதிவு – சுஜித் சாரங்

படத் தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங்

இசை – ஜேக்ஸ் பிஜாய்

கலை – சிவசங்கர்

சவுண்ட் இன்ஜினியர் – ‘சிங்க் சினிமாஸ்’ சச்சின் சுதாகரன்

தயாரிப்பு – நைட் நாஸ்ட்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட்

ஊடகத்தொடர்பு – நிகில்