தமிழினத்தின் பெருமைமிகு இயக்குனர் மகேந்திரன் மறைவு: தலைவர்கள், கலைஞர்கள் புகழஞ்சலி

“புகழ்பெற்ற இயக்குநர் மகேந்திரன் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர். சிறந்த எழுத்தாளர். அவரின் கலைத் திறமையை கண்டு கவரப்பட்ட நம் தேசிய தலைவரும் என்னுயிர் அண்ணனும் ஆகிய மேதகு வே.பிரபாகரன் நேரில் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து இயக்குநர் மகேந்திரனை நேரில் சந்தித்து திரைப்படக் கலை குறித்து விவாதித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு” என்று சீமான் கூறியுள்ளார்.

தமிழினத்தின் பெருமைமிகு திரைமொழியாளனாகவும், எம்மினத்தின் மகோன்னதக் கலைஞனாகவும் விளங்கிய இயக்குனர் மகேந்திரன் இன்று காலமானார். அவருக்கு தலைவர்கள், கலைஞர்கள் செலுத்தியுள்ள புகழஞ்சலி:-

மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்:

தமிழ் திரையுலக இயக்குநர்களில் ‘கதாநாயகராக’ விளங்கிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது 79 ஆவது வயதில் சென்னையில் மறைந்துவிட்டார் என்ற சோகச்செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு ‘இலக்கணமாக’ விளங்கிய அவர் ஒரு ‘யாதார்த்த சினிமா இயக்குநர்’ என்று திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரைப் பெற்றவர். தமிழ்உலகின் தலைசிறந்த கதாநாயகர்களுக்கு எல்லாம் திரைக்கதை, வசனம் எழுதி தனி முத்திரை பதித்தவர். மகேந்திரன் கதை, வசனம் எழுதி, இயக்கிய ரஜினி நடித்த ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் இன்றைக்கும் ‘அண்ணன் – தங்கை பாசத்திற்கு’ அடையாளமாகவும், அத்தாட்சியாகவும் திகழ்வதை நாம் காண்கிறோம்.

அழகப்பா கல்லூரியில் படித்த காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தி மாணவர்கள் மத்தியில் பிரபலமானவர் மட்டுமல்ல, ‘துக்ளக்’ போன்ற பத்திரிகையில் சினிமா விமர்சனமும் எழுதியவர். இளம் இயக்குநர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த உதாரணமாகவும் – எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த அவர் உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மட்டுமின்றி லேட்டஸ்டாக வெளிவந்த தெறி, பேட்ட படங்களிலும் தனி முத்திரை பதித்து தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் மிக முக்கியமானவர்.

பத்திரிகையாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என்று பன்முகத்திறமை கொண்ட அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகிற்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்:

நாடகங்களிலிருந்து அறிவியல் கண்டுபிடிப்பான திரை வடிவத்திற்கு கலை வடிவம் மாறுதல் பெற்றாலும் நாடகங்களின் இறுக்கமான கதை சொல்லல் முறைமையையும், நுட்பமான உணர்வுகள் அற்ற நடிப்பு முறைமையையும் திரைக் கலை கைவிடாமல் நாடகப் பாணியிலான திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில், இயல்பான காட்சிகள், அசலான மனிதர்கள், வியக்க வைக்கும் திரைக்கதை என தமிழ் திரையுலகுக்கு புது ரத்தம் பாய்ச்சிய மாமேதை மறைந்த இயக்குநர் மகேந்திரன்.

அவருடைய உதிரிப்பூக்கள் உலகத் திரைப்பட வரிசைக்கு தமிழ் திரை உலகின் மறக்கமுடியாத பூங்கொத்து. புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்கின்ற சிறு நாவலை தழுவி உருவாக்கப்பட்ட உதிரிப்பூக்கள் திரைப்படக் கலையை பயில விரும்பும் மாணவர்களுக்கு முதன்மைப் பாடமாக இன்னுமும் திகழ்கிறது. அதேபோல இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் தமிழ் திரையுலகின் மறக்க முடியாத மாபெரும் படைப்பாக திகழ்ந்து வருகிறது.

காட்சிகளின் இடையே நிகழுகின்ற வேதியியல் மாற்றத்தை சரியாகப் புரிந்துகொண்டு உயிரோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இயக்குநர் மகேந்திரன் ஒரு மாமேதை. கதாபாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை, மென்மையான காட்சிகள் மூலம் அழகாக திரையில் வடித்தெடுப்பதில் அவருக்கு இணையானவர் இந்திய திரை உலகில் எவரும் இல்லை.

தனது இறுதி காலத்தில் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தேர்ந்த நடிகராகவும் நடித்து புகழ்பெற்ற இயக்குநர் மகேந்திரன் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர். சிறந்த எழுத்தாளர். அவரின் கலைத் திறமையை கண்டு கவரப்பட்ட நம் தேசிய தலைவரும் என்னுயிர் அண்ணனும் ஆகிய மேதகு வே.பிரபாகரன் நேரில் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து இயக்குநர் மகேந்திரனை நேரில் சந்தித்து திரைப்படக் கலை குறித்து விவாதித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.

தமிழ் தேசிய இனத்தின் ஆற்றல்மிக்க கலையாளராக தமிழ் திரை உலகின் மூத்த படைப்பாளியாக திகழ்ந்த இயக்குநர் மகேந்திரனை இழந்து வாடும் தமிழ் திரை உலகின் மாபெரும் இழப்பில் அவர்களோடு ஒருவனாக நானும் பங்கேற்கிறேன். மாமேதை இயக்குநர் மகேந்திரனை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் திரைக்கலையின் மகத்தான மகுடம் ஐயா இயக்குநர் மகேந்திரனுக்கு எனது புகழ் வணக்கம்.

கவிஞர் வைரமுத்து:

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.

‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்; பதில் சொன்னவர் ரஜினிகாந்த். ‘மகேந்திரன் பாணிதான் என்னுடைய பாணி’ என்று என்னிடம் மனம்விட்டுப் பேசும்போது சொல்லியிருக்கிறார் மணிரத்னம். இன்றைய இளம் இயக்குநர்களுள் பலருக்குக் காட்சிப் படிமங்களைக் கற்றுத் தந்தவர் மகேந்திரன். இப்படி ஒரு தலைமுறையைத் தன் படைப்பாளுமையால் பாதித்தவர் மகேந்திரன்.

‘ஒரு குதிரை வீரன் பாட்டுப்பாடிக்கொண்டே எப்படிப் பயணம் செய்ய முடியும்?’ என்ற மகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கித் திருப்பியது. ‘தங்கப் பதக்க’த்தில் அவர் எழுதிய ‘அழகான தவறு’ என்ற வசனம் சிவாஜியைப் போலவே மறக்க இயலாதது.

எனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்கமுடியாத ஓர் உறவுண்டு. திரையுலகில் பாரதிராஜாவுக்கு நான் எழுதிய முதல் பாட்டு ‘பொன்மாலைப் பொழுது’ என்றாலும் நான் பாட்டெழுதி முதலில் வெளிவந்த படம் ‘காளி’. அந்தப் படத்தின் கதாசிரியராய் இருந்த மகேந்திரன்தான் அந்தப் பாடலின் கதைச் சூழலைச் சொல்லி என்னை எழுத வைத்தார்.

புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவிப் படைக்கப்பட்ட அவரது உதிரிப்பூக்கள் இந்திய சினிமாவின் நல்ல படங்களுள் ஒன்று. ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி. இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப் படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்.

இயக்குநர் சேரன்:

‘முள்ளும் மலரும்’ என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலரவேண்டும். ‘உதிரிப்பூக்கள்’ எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள். உங்கள் படைப்புகளோடு என்றும் எங்களோடு வாழ்வீர்கள்… நீங்கள் இல்லையென்ற செய்தி வந்தபோது உங்கள் படைப்புகளின் ஆயிரம் காட்சிகள் கோர்வையாக வந்துபோகின்றன.

இயக்குநர் பா.இரஞ்சித்:

இயக்குநர் மகேந்திரன், எளிமைதான் உங்கள் இலக்கு. திரைவிமர்சனம் எழுதியது மட்டும் இல்லாமல் எது கலைத்தன்மையோடு வெகு சன மக்களை கவர்ந்திழுக்கும் சினிமா என்று ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ போன்ற படங்களை எடுத்து காட்டிய அதிசயம் நீங்கள். ஐயா உம் படைப்புகள் எப்போதும் வாழும.

இயக்குநர் சீனு ராமசாமி:

தமிழ் சினிமாவின் இலக்கிய பூ உதிர்ந்து விட்டது.வரலாறு மறக்க முடியாத  இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தமிழ் படைப்பாளி என் முன்னோடி ஆசான் இயக்குனர் மகேந்திரன். இதய அஞ்சலி சார்.

இயக்குநர் வசந்தபாலன்:

சமரசமில்லாத கலைஞன் இயக்குநர் மகேந்திரன். தன் படைப்புகள் மட்டும் பேசப்பட்டால் போதும் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் சுயபெருமை பேசாமல், அவர் படங்களில் காணக்கிடைக்கும் அமைதியைப் போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். அவரிடம் இருக்கும் நிதானம், அர்த்தமிக்க அமைதி, முதிர்ச்சி அவரது படங்களில் பிரதிபலிக்கும். அவர் இழுத்துச் சென்ற தேர் அதே இடத்தில் அதன் தரிசனம் குறையாமல் ஒளிவீசிய வண்ணம் இருக்கிறது.

தங்கப்பதக்கம் திரைப்படம் அதன் வசனத்திற்காகவும் உரத்த கதைகூறலுக்காகவும் நினைவு கூறப்பட்ட திரைப்படம்.அந்த திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதிய மகேந்திரனின் திறமையைப் பாராட்டி அவருக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.மிகக் குறைவான வசனங்கள் உள்ள, திரைமொழிக்கு முக்கியத்துவமுள்ள முள்ளும் மலரும் திரைப்படத்தை இயக்குகிறார்.அங்குதான் அவரின் கலைத்தன்மை மேலெழுந்து நிற்கிறது.

இன்றும் அவர் படங்கள் அதன் ஸ்திரத்தன்மையை இழக்காமல் காலத்தை எதிர்த்து நிற்கின்றன.காளி என்கிற கதாபாத்திரம் நடிகர் ரஜினி அவர்களை பேட்ட வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திர வடிவமைப்பு. கதாசிரியராக, இயக்குநராக அவரின் படங்கள் காலம் மூர்க்கமாக வீசுகிற அலைகளுக்கு முன் துருவேறாமல் அப்படியே நிற்கின்றன.

ஒரு கலைஞனின் இடையறாத ஆசையும் கனவும் அதுதானே. தன் கனவு மெய்ப்பட்டதை கண்ட கலைஞன். நிறைவான பயணம். சென்று வாருங்கள் சார்

இயக்குநர் பார்த்திபன்:

முள்ளும் மலரும் மரணம்?. இன்னும் நூறு  வருடமாவது வாழும் மகேந்’திறன்’!!! பலரின் மரணம் வருத்தமளிக்கும். சாகுறவரைக்கும் சாதிக்கலையேன்னு…ஆனால் மகேந்திரன் சாரின் புகழ் இன்னும் நூறு வருடங்கழித்தும் சாகாது!

(பிற பின்)