ஆதரவாளர்கள் போல் நடித்து சசிகலா வீட்டிற்குள் நுழைந்து சங்கு ஊதியவர்கள் கைது! 

அதிமுக பொதுச்செயலாளரும், பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழக முதல்வராக பொறுப்பேற்க முனைப்புடன் இருப்பவருமான சசிகலாவின் ஆதரவாளர்கள் போல் நடித்து, அவர் வசிக்கும் போயஸ் தோட்ட இல்லத்துக்குள் நுழைந்து சங்கு ஊதியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போயஸ் தோட்டத்தில் சசிகலா தங்கியுள்ள இல்லத்திற்கு நேற்று நள்ளிரவு பத்து பேர் அவரது புகழ் பாடியபடி வந்தனர். வீட்டின்முன் நின்று சசிகலாவை வாழ்த்தி பாட்டுப் பாடினர்.

தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று சசிகலாவைச் சந்தித்து வாழத்துக் கூற அவர்கள் விரும்பினர். அதற்கு அப்பகுதியில் இருந்த காவலர்கள் முதலில் அனுமதி மறுத்தனர். பின்னர், வாழ்த்து தெரிவிக்கத் தானே கோருகிறார்கள் என்று உள்ளே அனுமதித்தனர். ஆனால், உள்ளே சென்றதும் அவர்கள் மறைத்து வைத்திருந்த சங்குகளை எடுத்து ஊதி சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டு பாடினர்.

சசிகலாவின் ஆதரவாளர்கள் போல் நாடகமாடி, பின் போயஸ் தோட்ட இல்லத்துக்குள் நுழைந்து சங்கு ஊதிய அந்த துணிச்சல்காரர்கள் 10 பேரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சென்னை போரூரைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிந்துள்ளது.

(குறிப்பு: மேலே உள்ள படத்துக்கும், செய்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.)