“வெறும் இரண்டேகால் லட்சத்தில் உருவான திகில் படம் ‘சாக்கோபார்!”

வெறும் இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இன்று இருக்கும் சினிமா சூழலில் டிஸ்கஷனுக்கே அது போதாது என்கிறீர்களா?

மிகக் குறைந்த செலவில் படம் எடுப்பது தான் திறமையான இயக்குனருக்கு சவால் என்பதை நிரூபிக்கும் வகையில், தெலுங்கின் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுத்து வெளியிட்டு, அதனை சூப்பர் ஹிட்டும் ஆக்கினார்.

 தமிழ்நாட்டில் சினிமாவுக்கு வரத் துடிக்கும் இளைஞர்களுக்கு அந்த படம் ஒரு பாடமாக அமையட்டுமே என்று அதனை வாங்கி டப் செய்து ‘சாக்கோபார்’ என்ற டைட்டிலில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர் மதுராஜ்.

இந்த படம் பற்றி மதுராஜ் என்ன சொல்கிறார்?

‘’இந்திய சினிமாவில் ஒரு வரலாற்று சாதனை செய்த திரைப்படம் தமிழில் ’சாக்கோபார்’ என்ற பெயரில் வெளிவருகிறது.

ஒரு திரைப்படம் எடுக்க ஒரு அலுவலகம் அமைப்போம். அதற்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சத்தில் இருந்து 3 லட்சம் அட்வான்ஸாக கொடுப்போம். ஆனால் அந்த அட்வான்ஸ் பணத்திலேயே படத்தை முடித்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

நம்ப முடியவில்லை என்றால் வரும் 26ஆம் தேதி தியேட்டரில் வந்து பாருங்கள். வெறும் இரண்டேகால் லட்சம் பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். இதில் இதுவரை இந்திய சினிமாவில் காட்டப்படாத காட்சிக் கோணங்கள் இடம் பெற்று இருக்கிறது.

கிளாமர் ஹாரர் படமான ‘சாக்கோபார்’ படத்தில் ஆறு பேர் மட்டுமே நடித்து இருக்கிறார்கள். ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன்பிறகு இப்படத்திற்கு ராம்கோபால் வர்மா ஒன்றரை கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார். தெலுங்கிலும் இந்தியிலும் சக்கைப் போடு போட்ட இந்த படம் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என வெளிவந்து இருக்கிறது.

நான் ஹைதராபாத் சென்றபோது யதார்த்தமாக பார்த்த படம் தான் இது. உடனே வாங்கி வெளியிட முடிவு செய்துவிட்டேன். எப்போதும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராம்கோபால் வர்மா, “என் படம் தமிழ் ரசிகர்களுக்கு புரியாது” என தர யோசித்தார். நான் உறுதியாக இருந்து படத்தை வாங்கி டப் செய்துள்ளேன்.

ஒரே ஒரு லொக்கேஷனில் மிகக் குறைந்த கலைஞர்களை வைத்து மிகக் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘சாக்கோபார்’ படம் திரைத்துறையினருக்கு மிகவும் உதவும். சாதாரண ரசிகனையும் திருப்திபடுத்தும் அளவுக்கு திகில் காட்சிகளும், கவர்ச்சியும் நிறைந்திருக்கிறது ‘சாக்கோபார்” என்றார் மதுராஜ்.