“கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் ‘பூமராங்”

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ்,  இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. ரதன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம், சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முன்னதாக இயக்குனர் மணிரத்னம் படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை வாழ்த்தினார்.

“மணிரத்னம் என்ற பள்ளியில் இருந்து வந்தவர் கண்ணன், நன்கு கலையை கற்றவர். அவரே சொந்தமாக தயாரித்து இவ்வளவு பிரமாண்டமாக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அவரை வைத்து கூடிய விரைவில் ஒரு படம் தயாரிப்பேன்” என்றார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

“நான் அறிமுகப்படுத்திய இரண்டு பேர் இந்த படத்தில் இருக்கிறார்கள். முரளியின் வீட்டுக்கு போகும்போது அதர்வா சின்ன வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஒரு கதை சொன்னபோது, அவர் தான் அதர்வாவை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அப்படி உருவான படம் தான் ‘பாணா காத்தாடி’. ஒவ்வொரு படத்திலும் திறமைகளை மெருகேற்றிக்கொண்டே வருகிறார். இயக்குனர் கண்ணன் முதலில் மனோபாலாவிடம் இணை இயக்குனராக வேலை பார்த்தார். அந்த நேரத்திலேயே நல்ல திறமைசாலி. அதன்பிறகு மணிரத்னம் சாரிடம் வேலை பார்த்தார். பின் தன்னம்பிக்கையோடு என்னிடம் வந்து ஒரு கதை சொல்லி, நான் அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என விரும்பினார். என் பேனரில் அவர் அறிமுகமானது மகிழ்ச்சி. அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர்” என்றார் சத்யஜோதி தியாகராஜன்.

“மெட்ராஸ் டாக்கீஸின் செல்லப்பிள்ளை கண்ணன். எங்கள் கம்பெனியின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு தான் அதிகம் இருக்கும். அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்ப அதிகம். நீங்கள் உங்களுக்கு பிடித்த இயக்குனராக இருக்க வேண்டும். அதர்வா, உங்கள் திறமைகள் உங்களுக்கு தெரியும், யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, படத்தின் ட்ரைலரை பார்த்த பிறகு கூட, மணிரத்னத்துக்கு இது என்ன மாதிரி படம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே படத்தின் முதல் வெற்றி” என்றார் சுஹாசினி மணிரத்னம்.

“கண்ணன் என் நண்பன், உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது. கடந்த படத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி கிடைக்காமல் போனது, அது இந்த படத்தில் கிடைக்க வேண்டும்” என்றார் இயக்குனர் சமுத்திரகனி.

“நாம் நல்லதோ, கெட்டதோ எது செய்தாலும் அது ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பது தான் பூமராங். கண்ணன் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்பது உண்மை தான். 50 நாளில் படத்தை முடிப்பேன் என சொல்லி, 43 நாட்களில் மிக வேகமாக படத்தை முடித்து விட்டார். மொத்த குழுவின் உழைப்பு அபரிமிதமானது. எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். தயாரிப்பாளராகவும் முழு கவனத்துடன் இருப்பார். ரதன் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாக இருந்தார் கண்ணன். நம்ம ஊரு இசையமைப்பாளர் ரதன் தெலுங்கில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு வந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தோஷம். சுஹாசினி அவர்களுடன் நடிப்பது எனக்கு பெருமை” என்றார் நாயகன் அதர்வா முரளி.

“2008ல் ‘ஜெயங்கொண்டான்’ ரிலீஸ் ஆகியது, 2018ல் இன்று ‘பூமராங்’. இதுவரை மொத்தம் 7 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் குரு மணிரத்னம் அவர்களை அறிமுகப்படுத்திய சத்யஜோதி தியாகராஜன், எனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது பெருமையான விஷயம். சுஹாசினி அவர்களை சந்தித்தது தான் என் வாழ்வின் திருப்புமுனை. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் ‘பூமராங்’. 130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறை தான். அதை படம் பேசும். நட்புக்கு மரியாதை கொடுக்கும் மனிதர் சமுத்திரகனி. அவருடன் என் நட்பு வாழ்நாள் முழுக்க தொடர ஆசை. வழக்கமான பாம்பே நாயகியாக இல்லாமல் சென்னை அண்ணா நகர் பெண்ணை நாயகியாக நடிக்க வைத்திருக்கிறோம். இசையமைப்பாளர் ரதன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இது கமெர்சியல் படமாகவும், நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும்” என்றார் இயக்குனர் கண்ணன்.

விழாவில் நாயகிகள் மேகா ஆகாஷ், இந்துஜா, நடிகர் சதீஷ், தயாரிப்பாளர்கள் கதிரேசன், ஞானவேல்ராஜா, ராம் பிரசாத், இயக்குனர்கள் விஜய், ஆர் கே சரவணன், முருகேசன், மிலிந்த் ராவ், ரவி மரியா,  ஈரோடு கலெக்டர் அழகிரி, ஒளிப்பதிவாளர் பிரசன்ன எஸ் குமார், இசையமைப்பாளர் ரதன், கலை இயக்குனர் சிவ யாதவ், எடிட்டர் செல்வா, வெங்கட் சுபா மற்றும் பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.