“பணம் செல்லாமைக்குப் பின் சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம்!” – மன்சூரலிகான்

மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையைப் பேசிய ‘தெரு நாய்கள்’ படத்தை எடுத்த  ஐ கிரியேஷன்ஸ் படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது ‘படித்தவுடன் கிழித்து விடவும்’.

‘தெரு நாய்கள்’ படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய புரடியூசர் கில்டு அமைப்பின் தலைவர் ஜாகுவார் தங்கம், “தமிழ் சினிமாவில் தமிழன், தமிழ் பெண்கள் தான் நடிக்க வேண்டும். இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் அதற்கு ‘தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை’ என்று பதில் வருகிறது. அழகான தமிழ் பெண்களை நான் தரவா? தமிழர்கள் தான் லைட் பாய் முதல் டைரக்டர் வரை அனைத்து தொழில்நுட்ப பிரிவுகளிலும் பணிபுரிய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழன் தான் ஆள வேண்டும், வாழ வேண்டும்” என்றார்.

p8

நடிகர் மன்சூரலிகான் பேசுகையில், “பொதுவா நான் எந்த சினிமா விழாவுக்குப்  போனாலும், அந்தப் படத்தை ஆஹா ஓஹோ அற்புதம் அப்படின்னு சும்மா  பாராட்டி பேச மாட்டேன். ஆனால், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘வளர்ந்தவுடன் சிதைத்து விடவும்’, ‘சாப்பிட்டவுடன் போய் விடவும்’ அப்படிங்கற மாதிரி ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ எனும் இப்பட டைட்டிலே இப்படக் குழுவினரின் துணிச்சலைக் காட்டுகிறது. இந்தப் பட டைட்டில் நிச்சயம் எல்லோரையும் பேச வைக்கும்.

மோடி அரசு கொண்டுவந்த  டீமானிடைசேஷனுக்கு முன்பு .தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா நல்லா இருந்தது .டிமானிடைசேஷனுக்கு அப்புறம் 500 சிறுபட புரடியூசர்கள் காணாமல் போயிட்டாங்க. அப்படித் தான் விலங்குகள் நல வாரியம்னு ஒரு அமைப்பு, எந்த மிருகத்தை வைத்தும் படம் எடுக்கவிடாமல் பண்ணுது.

ஒரு படம்னா டீஸர், டிரைலர் , ஆடியோ ரிலீஸ் விழா எல்லாம் வச்சு இந்தப் படத்துல இது இருக்கு, அது இருக்குன்னு சொல்லி ரசிகர்களை அழைக்கிறாம். ஆனா, திடீர்ன்னு 8 வழிச்சாலை போடுவோம்ன்னு சொல்லுது இந்த அரசாங்கம். 8 வழிச்சாலை யார் கேட்டா? 8 வழிச்சாலைக்கு அவசியம் என்ன? அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும் ? யாருக்கெல்லாம் பயன்? அப்படின்னு இந்த அரசாங்கம் விளக்கணும்ல? சினிமா விழா எடுத்து ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பது மாதிரி 8 வழிச்சாலை ஏன்னு சொல்லு.. ஏன் சொல்ல மறுக்கிறாய்?

இதற்கெல்லாம் பதில் சொல்லாத இந்த அரசாங்கம்,  எந்தளவுக்கு கேடுகெட்ட அரசாங்கம் என்றால், 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக 8 வழிச்சாலை போடத் துடிக்குது. கோவை சிறுவாணி தண்ணீய  தனியாருக்கு விற்கப் பார்க்குது . காத்து, ஆக்ஸிஜன் விற்கப் போகுது. அடுத்து தாய்பாலையும் மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்கு தர முயற்சிக்கும் .தமிழன் முழித்திருக்கும்போதே அவன் பேண்ட்டை அவிழ்க்கப் பார்க்கிறது. தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது. கேட்டால் இதெல்லாம் மத்திய அரசின் ‘மேக் இன் இண்டியா’ திட்டம் என்கிறார்கள்.  நீ என்ன வெங்காயம் விற்க , மயிர் புடுங்க ஆட்சி நடத்துகிறாய்? சினிமா நாசம் , விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான்  மத்திய அரசின் ‘மேக் இன் இண்டியா’ திட்டமா?” என்றார் மன்சூரலிகான்.

இப்பட இயக்குனர் ஹரி உத்ரா பேசுகையில், “ஹீரோ ஹீரோயின் வேல்யூ இல்லாத புது குழுவினரின் படங்களுக்கும்  தியேட்டர்கள்  கிடைக்க அனைத்து சினிமா சங்கங்களும் முயற்சிக்க  வேண்டும். மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலம் பாதிப்பு குறித்து என் முதல் படமான ‘தெரு நாய்கள்’ படத்தில் சுட்டிக் காட்டினேன் அப்படம் பேசப்பட்ட .அளவிற்கு வெகுமக்களிடம் போகவில்லை. என் இரண்டாவது படமான இந்த ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ ஹாரர் கதை என்றாலும், பேய் வழியாக இன்சூரன்ஸ் எனும் பெயரில் படித்தவர்கள் , படிக்காதவர்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் நடக்கும் கொள்ளையை பேசி உள்ளேன். இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து நிச்சயம் மூன்றாவது படமும் எடுப்பேன்” என்றார்.

இவ்விழாவில் நடிகர்கள் கூல் சுரேஷ், ஆர்யன், இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, ராம் சிவா, ஆண்டனி, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ சுரேஷ் சங்கைய்யா, ‘மொட்டசிவா கெட்டசிவா’ இசையமைப்பாளர் அம்ரீஷ், பாடகர் மலேசியா ஷாஸ், பாடலாசிரியர் உமா ,தென்னிந்திய  திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கத் தலைவர் விஜயமுரளி, இப்படத்தின் தயாரிப்பாளர்கள் உஷா, சுரேஷ்குமார், எஸ்.எம்.டி.கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர்.

முன்னதாக, ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ படத்தின் பாடல்களும் , டிரையிலரும் திரையிடப்பட்டு, இசை வெளியீடும் இனிதே நடந்தேறியது.