நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு: தனியார் மருத்துவமனை ஐ.சி.யூ.வில் அனுமதி

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று (16-04-2021) காலை சென்னை  வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விவேக் நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டார். அத்துடன் ‘எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்திவிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவருக்கு மயக்கமும், காய்ச்சலும் ஏற்பட்டதோடு நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு மாரடைப்புக்கான ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விவேக் தற்போது சுயநினைவுடன் இருக்கிறார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று திரைத்துறை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.